![NN](http://image.nakkheeran.in/cdn/farfuture/m7Eov8jk_ccaWxgiZnc-WOXTbeZf1TaXHgVLbKhrjck/1700016037/sites/default/files/inline-images/A3019.jpg)
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கடலூரில் 12 மணி நேரத்தில் 12 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் 70 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கடலூர் நகரை ஒட்டி ஓடும் தென்பண்ணையாற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு மழைநீர் செல்கிறது.
தென்பெண்ணை ஆற்றின் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கும்தா மேடு என்ற புதுவை மாநில பகுதிக்குச் செல்ல தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதில் பொதுமக்கள் சென்றால் ஆபத்து ஏற்படும் எனப் பாலத்தை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தொடர் கனமழை காரணமாக ஆற்றில் அதிகமாகத் தண்ணீர் செல்வதை கடலூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஐயப்பன் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆற்றின் கரையோரம் குடியிருக்கும் பொதுமக்களிடம், ஆற்றில் அதிகம் தண்ணீர் வந்தால் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் அருகே உள்ள பாதுகாப்பான அரசு இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தினார். மேலும் அவர்களுக்கு எந்த நேரத்தில் உதவி தேவைப்பட்டாலும் உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டும் எனவும் கூறினார். இவருடன் அரசு அலுவலர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.