Skip to main content

காட்டாற்று வெள்ளத்தையும் கடந்து சென்று நிவாரணம் வழங்கிய அப்பாவு! (படங்கள்) 

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏவாகவும், சட்டப்பேரவை சபாநாயகராகவும் இருப்பவர் அப்பாவு. ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி அரசியலுக்கு வந்தவர். தொடக்கத்தில் அரசியல் கட்சியான த.மா.க. மூலம் எம்.எல்.ஏ.வான அப்பாவு, பின்னர் தன் சொந்த செல்வாக்கால் சுயேட்சையாகக் களம் கண்டு இரண்டாம் முறை எம்.எல்.ஏ. ஆனார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வாக்கு எண்ணிக்கை அவருக்குச் சாதகமாக இருந்தும் ‘ஜெ’ ஆட்சியின்போது நூலிழையில் வெற்றி வாய்ப்பு பறிபோனாலும் பொறுமை காத்த அப்பாவு, இம்முறை எம்.எல்.ஏ.வாகி தன்னுடைய 69ஆம் வயதில் சட்டப்பேரவையின் தலைவராகியிருக்கிறார்.

 

ஆசிரியர், எம்.எல்.ஏ. என்ற பொறுப்புகளைக் கொண்டாலும், ராதாபுரம் தொகுதியின் இண்டு இடுக்கெல்லாம் இவரது விரல் நுனியில். வானம் பார்த்த பூமியான ராதாபுரம் தொகுதி, குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாகக்கொண்ட பகுதி. இரண்டாம் முறையாக எம்.எல்.ஏ ஆனபோது தொகுதி முழுக்க கிராமங்களில் முதன்முதலாக மோட்டார் பம்ப்புடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டியை அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு தணித்தவர். அப்பாவு எம்.எல்.ஏ. அறிமுகப்படுத்திய இப்புதிய திட்டம் பின்னர் தமிழ்நாடு முழுவதும் செயல்படுவதற்குக் காரணமாக இருந்தது.

 

இந்நிலையில் தற்போது வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட, அடைமழையாய் கொட்டித் தீர்க்கிறது. மேலும், இடைநில்லாமல் மழை பொழியும் கன்னியாகுமரியை ஒட்டியிருப்பதால், அம்மாவட்டத்தின் மழையின் தாக்கம் அருகிலுள்ள ராதாபுரம் தொகுதியையும் பதம் பார்த்திருக்கிறது. இதன் காரணமாக ராதாபுரம், பணகுடி சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல கிராமங்களில் கடும் பாதிப்பு. இதனையறிந்த சபாநாயகர் அப்பாவு தன்னோடு சிலரை அழைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குப் போயிருக்கிறார். அது சமயம் கடும் வெள்ளம் காரணமாக கொமந்தான்குளம் கிராமத்திற்குள் செல்லும் தரைப்பாலத்திலும் தைலம்மாள்புரத்தின் வடக்கு தரைப்பாலத்திலும் அரிப்பு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டதால், அங்கு செல்ல முடியாத நிலை. 

 

அப்போது அங்கு வந்த சபாநாயகர் அப்பாவுவிடம், “வெள்ளமிருப்பதால் வர வேண்டாம். வடிந்த பின் வாருங்கள்” என்று மக்கள் சொல்லியும், சபாநாயகரோ “நான் எப்படியும் வந்து உங்களை நேரில் பார்ப்பேன். அதற்காகத்தான் வந்துள்ளேன்” என்றவர், அப்பகுதி இளைஞர்களின் உதவியோடு ஆபத்தான காட்டாற்று வெள்ளத்தைக் கடந்து சென்று, அங்குள்ள 60 குடும்பங்களுக்கு அரிசி, ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கினார்.

 

அந்தப் பகுதியில் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட லெட்சுமணன் என்பவருக்கு ரூபாய் 5,000 பணம் மற்றும் தேவையான உணவுப் பொருட்களையும் வழங்கினார் சபாநாயகர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை நிவாரண உதவிகள் வழங்கவும், இயற்கை பேரிடர் கால நிவாரண நிதியின் மூலம் வீடு இழந்தவர்களுக்கு உடனடியாக வீடு கட்டித்தர ஏற்பாடுகளை விரைந்து செய்வதுடன், போர்க்கால அடிப்படையில் அரித்துச் செல்லப்பட்ட கொமந்தான்குளம் சைதம்மாள்புரம் பாலம் புதிதாகக் கட்டப்படும் என்று உறுதியாகச் சொன்னவர், வள்ளியூர் பெரியார் சமத்துவபுரத்தில் ஒழுகும் வீடுகளை ஆய்வுசெய்து உடனடியாகச் சரிசெய்ய உரிய அதிகாரிகளை விரைவுப்படுத்தியிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்