திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த 14 ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 306 கிராம ஊராட்சிகள் உள்ளன. அதே சமயம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி தணிக்கைத்துறையின் உதவி இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிகளின் வருடாந்திர வரவு செலவு கணக்குகளை ஊரக வளர்ச்சி தணிக்கை குழுவினர் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த ஆய்வின் போது ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள் தனிக்கைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊரக வளர்ச்சி தணிக்கைத்துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜன், ஆய்வாளர் ரூபா தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடமிருந்து கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்ததுடன் அதற்கான விபரங்களையும் சேகரித்து வருகின்றனர்.