Skip to main content

“கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம்” - அன்புமணி ராமதாஸ்

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

Anbumani Ramadoss said that we will announce the alliance in due time

 

“கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம். கர்நாடகாவில் உள்ள 4 அணைகளையும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்குக் கீழ் கொண்டு வர வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

 

ஈரோட்டில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “உலக அளவில் பேட்மிட்டன் போட்டியில் இந்தியா பல பரிசுகளை பெற்று வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் உலக அளவில் பதக்கங்களை வாங்க வேண்டும் என்பது எங்களது நோக்கம். குறிப்பாக கிராமப்புற மாணவ - மாணவிகள் அதிகமாகப் பங்கேற்க தொடங்கி உள்ளனர். தமிழக அரசு இன்னும் ஊக்குவிக்க வேண்டும். நீண்ட காலமாக அத்திக்கடவு - அவினாசி திட்டம் முடிக்கப்படாமல் இருந்து வருகிறது. கடந்த ஒரு வருடமாக 90 சதவீதம் முடிவடைந்தும் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

 

ஆகஸ்ட் மாதத்தில் குறைவான மழை கிடைத்துள்ளது. உடனடியாக அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்ற வேண்டும். பாண்டியாறு - புண்ணம்பழா திட்டம், காவிரி குண்டாறு திட்டம் ஆகிய திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். விசைத்தறி கூடங்கள் அதிக அளவில் மூடப்பட்டுள்ளன. விசைத்தறிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பின்னலாடை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேகதாதுவில் அணை கட்டுவது கண்டனத்திற்குரியது. உச்ச நீதிமன்றம் கூறியும் அதனை ஏற்க மறுக்கிறது கர்நாடகா. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளையும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கீழ் கொண்டு வர வேண்டும். நெல் குவிண்டாலுக்கு 7 ரூபாய் மட்டுமே தமிழக அரசு உயர்த்தி உள்ளது. 500 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயம் அழிந்து வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் 10 தடுப்பு அணைகள் நாங்கள் கேட்டோம். ஆனால் தற்போது 10 மணல் குவாரிகளை உருவாக்கி உள்ளது இந்த அரசு.

 

என்.எல்.சி.கடலூர் மாவட்டத்தின் பிரச்சினை இல்லை. இது தமிழகத்தின் பிரச்சினை. தமிழக அரசு 67 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை என்.எல்.சிக்கு கொடுத்துள்ளது. விளை நிலங்களை அழித்து மின்சாரம் தேவையில்லை. காற்றாலை, நீர் உள்ளிட்ட மூலமாக தயாரிக்கலாம். தமிழகத்தின் நான்காவது நெல் உற்பத்தி பகுதியினை தற்போது தமிழக அரசு என்.எல்.சி. நிர்வாகத்தின் மூலம் விளைநிலங்களை அழித்து வருகிறது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது குறித்து அதிலுள்ள சாத்தியக் கூறுகளை பார்க்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் 12 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே உள்ளது. நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடத்த தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லை.

 

இதற்காக அமைக்கப்பட்ட குழு என்ன பரிந்துரை கூறுகிறதோ அதற்கு பிறகு நாங்கள் கருத்து தெரிவிப்போம். விரைவில் கூட்டணி குறித்து எங்களது முடிவை அறிவிப்போம். நீட் தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. தமிழகத்திற்கு எதிரானது. கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. தகுதியான மருத்துவரை நீட் தேர்வு உருவாக்கவில்லை. மருத்துவ படிப்பு என்பது வியாபாரம் ஆக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். நீட் தேர்வு குறித்து ஆளுநர் தனிப்பட்ட கருத்துக்களை திணிக்கக் கூடாது. ஆளுநர் நடுநிலையாக செயல்பட வேண்டும். தமிழகத்தில் இளைஞர்களிடம் மது, சூது, போதைப் பொருட்கள் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் கட்டுப்பாட்டை மீறி அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்புப் பிரிவில் போதுமான காவலர்கள் இல்லை.

 

தமிழகத்தில் தற்போது மதுவிலக்குத் துறை அமைச்சர் இல்லை மது விற்பனை துறை அமைச்சர் தான் உள்ளார். அந்த துறை தற்போது மது விற்பனை துறையாக மாறிவிட்டது. தமிழக அரசு சாராயத்தில் மட்டுமே இலக்கு நிர்ணயம் செய்து கொண்டு உள்ளது. திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

'இலச்சினையில் தன்வந்திரி'-அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Dhanvantri in alphabet; Immediate withdrawal - Anbumani Ramadoss insists

 

இந்தியாவில் மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் அமைப்பான  தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் தன்வந்திரி படம் இடம் பெற்றுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவில் மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் அமைப்பான  தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் தன்வந்திரி எனப்படும் கடவுளின் உருவப்படம் திணிக்கப்பட்டிருப்பதும்,  இந்தியா என்ற பெயருக்கு மாற்றாக பாரத் என்ற பெயர் பொறிக்கப்பட்ட இருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது முற்றிலும் தேவையற்ற செயலாகும். இது கண்டிக்கத்தக்கது.

 

மருத்துவம் என்பது உயிர் காக்கும் தொழில் ஆகும். உயிரியலும், தொழில்நுட்பமும் தான் மருத்துவத்திற்கான அடிப்படை ஆகும். மருத்துவத்திற்கு மனிதநேயம் கூடுதல் தகுதி ஆகும். ஆனால், இவற்றில் எந்த ஒன்றுடனும் தொடர்பில்லாத தன்வந்திரி கடவுளின் படத்தை மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் சேர்ப்பது எந்த வகையில் நியாயம்? தன்வந்திரி என்பவர் பாற்கடலை தேவர்கள் கடையும் போது உருவெடுத்தவர்; அவரால் தான் ஆயுர்வேத மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது; அவர் தான் தேவர்களுக்கு மருத்துவம் அளித்தார் என்றெல்லாம் புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. அவை அழகான கற்பனை என்பதைக் கடந்து வேறொன்றுமில்லை.

 

கற்பனைக் கடவுளை மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் திணிப்பது மிகவும் பிற்போக்கானது. மருத்துவக் கட்டமைப்பு, மனித வளம் இல்லாமல் மருத்துவக் கல்லூரிகள் நடத்தப்பட்டால், அதற்கான நடவடிக்கை  எடுக்கும் பொறுப்பில் உள்ள மருத்துவ ஆணையம் இப்படி ஒரு செயலை செய்திருக்கக் கூடாது. மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமிக்காமல் தன்வந்திரியின் உருவப்படத்தை வைத்து அவரே மானசீகமாக மாணவர்களுக்கு  மருத்துவப் பாடம் நடத்துவார் என்று கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் கூறப்பட்டால், அதை மருத்துவ ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா?

 

மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் தன்வந்திரியின் படம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே சேர்க்கப்பட்டு விட்டதாகவும்,  கறுப்பு - வெள்ளையில் இருந்த படத்திற்கு இப்போது வண்ணம் மட்டுமே சேர்க்கப்பட்டிருப்பதாகவும்  மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல. தன்வந்திரி படம் எப்போது சேர்க்கப்பட்டிருந்தாலும் அது தவறு தான். அதற்கு இப்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதை மதித்து இலட்சினையில் இருந்து தன்வந்திரி படம் நீக்கப்படுவது தான் முறையாகும்.

 

மருத்துவக் கல்லூரிகளில்  முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க நிகழ்ச்சியின் போது ஹிப்போகிரட்டிக் உறுதிமொழிக்கு மாற்றாக மகரிஷி சரகர் உறுதிமொழியை ஏற்றுக்கொள்ளலாம் என்று  கடந்த ஆண்டு மருத்துவ ஆணையம் பரிந்துரைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது தன்வந்திரி படத்தை திணித்து அடுத்த சர்ச்சையை  ஏற்படுத்தியிருக்கிறது. மருத்துவத்துறை வளர்ந்து விட்ட நிலையில், அதை மேலும் வலுப்படுத்த மருத்துவக் கல்வி  ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக, புராணங்களின் அடிப்படையில் சர்ச்சைகளை திணிக்க முயலக்கூடாது. தேவையின்றி ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் தன்வந்திரி படத்தை நீக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

3 மாநிலங்களில் பாஜக- தெலுங்கானாவில் 'கை' பதித்த காங்கிரஸ்

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

BJP in 3 states - Congress in Telangana

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11.30 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 66 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 41 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 162 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 65 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 107 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 75 இடங்களிலும், மற்றவை 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 53 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் 35 இடங்களிலும் மற்றவை  2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. நாளை மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

தற்போதைய நிலவரப்படி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மை தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதால் அந்த மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தெலுங்கானாவில் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதால் முதன்முதலாக தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்