Skip to main content

தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப்பாடம் ஆக்குவது எப்போது? - அன்புமணி

Published on 27/02/2025 | Edited on 27/02/2025

 

Anbumani  question When will Tamil be a compulsory subject

தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்கி சட்டம் கொண்டு வரவோ அரசு  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம், தமிழை வெறுக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தமிழக ஆட்சியாளர்கள் செலுத்தி வரும் பதில் மரியாதை தான் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெலுங்கானாவில் மாநிலப் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகளாகியும்  இன்று வரை அந்தச் சட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தெலுங்கானாவில் தெலுங்கை கட்டாயப்பாடமாக்கும் சட்டம் 2018ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கடந்த 2022-23ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப்பாடமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முந்தைய சந்திரசேகரராவ் ஆட்சியில் அச்சட்டம் முறையாக செயல்படுத்தப்படாத நிலையில், இப்போது தெலுங்கு கட்டாயப் பாடச் சட்டம் புதிய தீவிரத்துடன் செயல்படுத்தப்படும்; 2025-26ஆம் ஆண்டில் ஒன்பதாம் வகுப்பிலும், 2026-27ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பிலும் தெலுங்கு மொழிப் பாடத்திற்கு கட்டாயம் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆணை பிறப்பித்திருக்கிறார். தாய்மொழியை காக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது.

ஆனால், தமிழை வளர்க்கிறோம், வாழ வைக்கிறோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழகத்தில் தமிழை இன்னும் பயிற்று மொழியாகவோ, கட்டாயப்பாடமாகவோ கொண்டு வர முடியவில்லை. தமிழ் மொழியை கட்டாயப்பாடமாக்குவதில் தமிழக ஆட்சியாளர்கள் செய்த துரோகங்கள் மிக நீண்டவை. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் சட்டம் 2006 ஆம் ஆண்டில் நிறைவேற்றப் பட்டது. அந்த சட்டத்தின்படி ஆண்டுக்கு ஓர் வகுப்பு வீதம் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட்டு 2015-16ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன்பின் 9 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புத்  தேர்வில் தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கப்படவில்லை. அதற்காக ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்படுவதற்கு எதிராக தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தை தடை செய்ய முடியாது என்று கூறிவிட்ட உயர்நீதிமன்றம், 2022-23ஆம் ஆண்டு முதல் தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டது. அதை எதிர்த்து தனியார் பள்ளிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் நாள் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,‘‘ உள்ளூர் மொழியைக் கற்றுக் கொள்வது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளது. அதேநேரத்தில் உள்ளூர் மொழியை கற்பிக்க தனியார் பள்ளிகள் மறுப்பது தேச ஒற்றுமைக்கு நல்லதல்ல’‘ என்று கூறியது. எனினும், பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்க ஒரு மாதம் மட்டுமே இருந்த நிலையில், அதற்குள்ளாக வழக்கை விசாரித்து முடிக்க முடியாது என்பதால், தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தை செயல்படுத்துவதிலிருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும், கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலை மாதத்தில் வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிப்பதாகவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்  அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்திருந்தால், 2023 - 24ஆம் ஆண்டிலேயே தமிழ்க் கட்டாயப்பாடமாகியிருந்திருக்கும். ஆனால், இன்று வரை அந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வர திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், 2015-16ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ உள்ளிட்ட பிற கல்வி வாரியங்களுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக்கி, கடந்த 18.09.2014 அன்று அப்போதைய தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி நடப்பு 2024-25ஆம் ஆண்டில் பிற பாடத்திட்டங்களை பின்பற்றும் தனியார் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் அதை செய்யாத திமுக அரசு, அந்தக் கடமையிலிருந்து தனியார் பள்ளிகளைக் காப்பாற்றும் நோக்குடன் 2023 ஆம் ஆண்டு மே மாதம் தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.

அதன்படி, சிபிஎஸ்இ உள்ளிட்ட பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் தமிழைக் கட்டாயப் பாடமாக்கத் தேவையில்லை; அதற்கு பதிலாக தமிழைக் கூடுதல் கட்டாயப் பாடமாக்கினால் போதுமானது; தமிழ்ப் பாடத்திற்கு சிபிஎஸ்இ உள்ளிட்ட வாரியங்கள் தேர்வு நடத்தத் தேவையில்லை; தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறையே நடத்தி அதற்கான சான்றிதழை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இது மோசடியானது. தனியார் பள்ளிகள் எந்தப் பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றனவோ, அந்தப் பாடத்திட்டத்தின்படி தமிழ்ப் பாடத்திற்கு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப் பட்டால் தான் மாணவர்கள் தமிழைப் படிப்பார்கள். மாறாக, பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடம் கிடையாது; பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற தமிழ்க் கட்டாயம் கிடையாது; எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையில், தமிழக அரசுத் தேர்வுத் துறை நடத்தும் தேர்வை பெயரளவில் எழுதினால் போதுமானது என்றால் எவரும் தமிழ் படிக்க மாட்டார்கள்.

இன்னொருபுறம், தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாக்கும் அரசாணை செல்லாது என்று  உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து 2000 ஆம் ஆண்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு 25 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை விசாரணைக்கு கொண்டு வரவோ அல்லது தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்கி சட்டம் கொண்டு வரவோ அரசு  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம், தமிழை வெறுக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தமிழக ஆட்சியாளர்கள் செலுத்தி வரும் பதில் மரியாதை தான். இது தமிழ்த் துரோகம்.

தாய்மொழிக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை கேரளம், தெலுங்கானம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற பிற திராவிட மாநில அரசுகளிடமிருந்து தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இனியும் அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்வதை விடுத்து, தமிழகத்தில் தமிழைக் கட்டாயப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயல்படுத்த தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்