Skip to main content

அமமுக பிரமுகர் நிர்வாண நிலையில் கொடூரக் கொலை..! கணவன் - மனைவி கைது

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

ddd

 

அமமுக பிரமுகர் நிர்வாண நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவன் - மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வம் (45). இவர் அமமுகவில் வர்த்தக அணி பிரிவு செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக சமயபுரம் அருகே சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுங்கூர் ஊராட்சியில் உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தில் வசித்து வருகிறார். 

 

நெடுஞ்சாலைகளுக்குத் தார் விற்பனை செய்வது உள்ளிட்ட பிற தொழில்கள் செய்து வருவதாகவும், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி மற்றும் சட்ட விரோத செயல்களிலும் இவர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவரது மனைவி மற்றும் குழந்தைகள் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வசித்து வருவதால், 15 நாட்களுக்கு ஒருமுறை மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க ஆலங்குடி வந்து செல்வார். 

 

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (16.04.2021) நெடுங்கூர் கிராமத்தில் உள்ள இவரது வீட்டின் கழிவறையில் நிர்வாண நிலையில் கழுத்தும், பிறப்புறுப்பும் அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

அப்போது பாண்டிசெல்வம் வீட்டின் அருகே வசிக்கும் சங்கீதா என்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அதிர்ச்சியான தகவல்கள் தெரியவந்தன. கொலையான பாண்டிசெல்வம் வீட்டின் அருகே வசிக்கும் பொன்னம்பலம் (30) லாரி டிரைவர். இவருக்கு சங்கீதா (23) என்ற மனைவி உள்ளார். தனது கணவர் லாரி ஓட்டச் செல்லும்போதெல்லாம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஆய்குடி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதனை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

 

சங்கீதா தாய் வீட்டிற்கு செல்வது குறித்து பொன்னம்பலம், தனது மனைவி மீது சந்தேகம் அடைந்தார். அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, ''நீங்கள் பணிக்காக வெளியூர் செல்லும்போதெல்லாம் பாண்டிசெல்வம் என்னிடம் பாலியல் சீண்டல் தொல்லை கொடுத்து வருகிறார்'' என கூறி அழுதுள்ளார்.

 

தனது மனைவிக்கு நிகழும் பிரச்சினைக் குறித்து, நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த தனது பெரியப்பா மகன் பசுவராஜ் (30) என்பவரிடம் கூறி பொன்னம்பலம் புலம்பியுள்ளார். இதையடுத்து பொன்னம்பலம், அவரது மனைவி சங்கீதா, பொன்னம்பலம் உறவினர் பசுவராஜ் ஆகியோர் மூவரும் சேர்ந்து, கடந்த 14ஆம் தேதி வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பாண்டியனை கத்தியால் கழுத்தை அறுத்தும், ஆணுறுப்பை அறுத்தும் கொலை செய்ததாக விசாரணையில் தெரிவித்தனர்.

 

கொலை நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் போலீசாருக்கே இந்த விஷயம் தெரியவந்தது. பின்னர் கொலை குறித்து வழக்குப் பதிவுசெய்த சிறுகனூர் போலீசார், பொன்னம்பலம், அவரது மனைவி சங்கீதா, பொன்னம்பலத்தின் உறவினர் பசுவராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பொன்னம்பலம் மற்றும் பசுவராஜ் ஆகியோரை துறையூர் கிளைச் சிறையிலும், சங்கீதாவை திருச்சி பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.