Skip to main content

போதையில் மக்களிடம் தகராறு செய்த அமெரிக்கர்; மூடி மறைக்கும் காவல்துறை 

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

An American who got into a drunken argument with people in Tiruvannamalai

 

திருவண்ணாமலை நகரில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. அதேபோல் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகமாக உள்ளது என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளது. திருவண்ணாமலை நகரம், கிரிவலப் பாதையில் கஞ்சா போதை ஆசாமிகள் அதிகளவில் உள்ளார்கள். தங்கு தடையின்றி கஞ்சா விற்பனை நடக்கிறது. இதனால் எங்கள் பகுதி பெண்கள், குழந்தைகள் இரவில் நடந்து செல்ல முடியவில்லை என நகர்மன்ற கூட்டத்திலேயே சில கவுன்சிலர்கள் குறிப்பிட்டனர்.

 

இந்நிலையில் கிரிவலப் பாதையில் அரசு கலைக்கல்லூரி அருகில் திருவண்ணாமலை டூ பெங்களூரூ சாலையில் அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர், பிப்ரவரி 23 ஆம் தேதி காலை 8 மணியளவில் சாலையில் வாகனங்களை மடக்கி தள்ளாடியபடி பிரச்சனை செய்ய துவங்கினார். கல்லூரி மாணவர்கள் இருவர் வந்த ஒரு இருசக்கர வாகனத்தை மறித்து வண்டியிலிருந்த சாவியை எடுத்துக்கொண்டு, சாலையின் சென்டர் மீடியன் சுவரில் ஏறி அமர்ந்துகொண்டு தள்ளாடிக்கொண்டு இருந்தார். அந்த இளைஞர்கள் சாவி கேட்டும் தராமல் பிரச்சனை செய்ய இதனால் அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது.

 

சாவியை வாங்கச் சென்ற ஒரு இளைஞனின் செல்போனை பறித்து கீழே வீசி அதை காலால் தேய்த்து உடைத்துள்ளார். திருவண்ணாமலை நகர காவல்நிலையத்துக்கு தகவல் சொல்லப்பட்டதும் இரண்டு போலீசார் சம்பவயிடத்துக்கு வந்தனர். அவர்களையும் அந்த வெளிநாட்டுக்காரர் தாக்க முயற்சி செய்ய அந்த நபரை பிடித்து அவரின் கைகளைப் பின்னால் கட்டி கல்லூரி முன் உட்கார வைத்துவிட்டனர். தன்னை யாரும் வீடியோ எடுக்கக்கூடாது; மருத்துவமனைக்கு அனுப்பக்கூடாது என தகராறு செய்தார். சக வெளிநாட்டு பயணி ஒருவர் அவரின் அருகில் அமர்ந்து பேசியவர் குடிக்க தண்ணீர் தந்தபோது, அதில் “விஷம் கலந்து தர்ற” எனச் சொல்லியபடி அதனை வாங்கி குடிக்க மறுத்துவிட்டார். 108 ஆம்புலன்ஸ் வரவைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைக்க முயன்றனர். அவர் போகாமல் தகராறு செய்தார். பின்னர் அவரின் கால்களை கட்டி ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அந்த நபர் திருவண்ணாமலையில் கடந்த 3 மாதமாக ரமணாஸ்ரமம் அருகே ஒருவரின் வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளார் என்கிற தகவல் கிடைத்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே கிரிவலப் பாதையில் காஞ்சி சாலையில் கஞ்சா போதையில் அந்த வழியாகச் சென்ற பொதுமக்களிடம் பிரச்சனை செய்த காவி வேட்டி அணிந்த யாசகரை, பொதுமக்கள் அடித்து உதைத்து கைகளை கட்டி வைத்திருந்தனர்.

 

இப்படி போதை ஆசாமிகளின் ஆட்டம் கிரிவலப் பாதையில் அடிக்கடி நடைபெறுகிறது. உள்ளூர் கஞ்சா போதை ஆசாமிகளின் அட்டகாசம் நடந்த நிலையில் தற்போது வெளிநாட்டினர் ஒருவர் போதையில் ரகளையில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதையை மறைக்க அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிற தகவலை போலீஸ் சொல்லி வருகிறது என்கின்றனர் பலர். 

 

An American who got into a drunken argument with people in Tiruvannamalai

 

திருவண்ணாமலையில் வெளிநாட்டினர் அதிகளவில் பக்தியாக வருவது வழக்கம். கடந்த ஜனவரி மாதத்துக்கு பின்னர் அதிகளவில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து நாட்டிலிருந்து வருகின்றனர். இவர்கள் இங்கு வந்து 6 மாதம், ஒரு வருடம் என தங்குகின்றனர். சுற்றுலா விசாவில் வந்தவர்கள் சத் சங்கம் என்கிற பெயரில் சம்பாதிக்கின்றனர்.

 

விடுதியில் தங்கியிருந்த ஒரு ரஷ்யா பெண்ணை, போதை பவுடர் அதிகமாக தந்து மயக்கமாக்கி இரண்டு நாட்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து இரண்டு ஆண்டுக்கு முன்னர் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சில வெளிநாட்டினர் மர்ம மரணமும் நடைபெற்றுள்ளது. வெளிநாட்டினர் இங்கு ஆன்மீகம், தியானம், சுற்றுலா, அமைதியான வாழ்க்கை என வந்து தங்கினாலும் சிலர் இப்படி போதைக்கு அடிமையாகிறார்கள்; அடிமையாக்கப்படுகிறார்கள். இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை மனநலம் பாதிப்பு என திசை திருப்புகிறது.

 

மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு இந்தியாவிற்குள் நுழைய இந்திய தூதரகம் எப்படி விசா வழங்கியது? என்கிற கேள்வி எழுகிறது. திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சொல்வதுபோல் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இந்திய வெளியுறவுத்துறை இந்தியாவுக்குள் அனுமதிக்கிறது என்றால் இந்தியாவின் பாதுகாப்பு எந்தளவுக்கு உள்ளது என்கிற கேள்வி எழுகிறது? இதற்கு யார் பதில் சொல்வார்கள்? என சமுக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.