Skip to main content

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
All party meeting led by CM MK Stalin

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கடந்த 11 ஆம் தேதி (11.07.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “தமிழகத்திற்கு ஜூலை 12 ஆம் தேதி (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி வரை நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” எனக் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று  முன்தினம் (14.07.2024) அனைத்து கட்சி கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “காவிரியில் நீர் இருப்பின் தற்போதைய நிலவரத்தைக் கருத்தில் கொண்டு கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து ஜூலை 15 ஆம் தேதி முதல் 8 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. எனவே நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரைத் தமிழகத்திற்குத் திறக்க முடியாது. இந்த மாதம் இறுதிவரை தினமும் ஒரு டிஎம்சி என மொத்தமாக 20 டிஎம்சி நீர் திறக்க வேண்டுமெனக் காவிரி ஒழுங்காற்றுக் குழு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் ஜூலை 12 முதல் 31 வரை தினமும் 1 டிஎம்சி (11 ஆயிரத்து 500 கன அடி) தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவைக் கர்நாடக அரசு ஏற்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கர்நாடகாவில் இருந்து காவிரி நீரைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (16.07.2024) காலை 11.00 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என  முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பான சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் இந்த கூட்டத்தில் முதல்வர் மு .க.ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சார்ந்த செய்திகள்