Skip to main content

அனுமதியின்றி மது விருந்து - காவல்துறை கடும் எச்சரிக்கை!

Published on 22/05/2022 | Edited on 22/05/2022

 

ரகத

 

சென்னையில் அனுமதியின்றி மது விருந்து நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

சென்னை திருமங்கலத்தை அடுத்த விஆர் மாலில் மதுவுடன் கூடிய ஆடல், பாடல் நிகழ்ச்சி நேற்று இரவு நடத்தப்பட்டது. இதற்கு முறையாக அனுமதி வாங்காமல் மது விருந்து நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். சில ஆயிரம் கட்டணத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னையின் பல பகுதிகளில் இருந்து இளைஞர்கள், இளம்பெண்கள் என சுமார் 100-க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டது தெரியவந்தது. 

 

அனுமதி பெறாததால் காவல்துறையினர் நிகழ்ச்சியை நிறுத்தினர். அத்துடன், அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் விலை உயர்ந்த மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே மது போதையில் இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து பலியானார். இதனால் அதிர்ச்சியான காவல்துறையினர் மது விருந்தில் போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டதா என்று கோணத்தில் விசாரணை செய்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மாநகர காவல்துறை, " சென்னை மாநகரத்தில் காவல்துறை அனுமதி இல்லாமல் மது விருந்து உள்ளிட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சியில் 4 இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Rs 9 lakh confiscated at 4 places in Trichy

தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க திருச்சி மாவட்டத்தில் 81 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நிலையான கண்காணிப்பு குழுவும் 14 சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரமங்கலம் பஸ் நிறுத்தத்தில் பறக்கும் படை அதிகாரி வினோத் குமார் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் சிக்கியது. கீரிப்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த தொகையை எடுத்து சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் மணச்சநல்லூர் தாசில்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேபோன்று மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் பணமானது பறக்கும் படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு திருச்சி மேற்கு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் கத்தரிக்காய் சாலையில் பிரபு தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை திருமயம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் லால்குடியில் இருந்து குமுலூர் நோக்கி தனது காரில் 50 ஆயிரத்து 500 பணத்தினை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற போது பிடித்தனர். அதனைத் தொடர்ந்து லால்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் தாசில்தார் முருகன், தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் ஆகியோரிடம் பறக்கும் படைத்தலைவர் பிரபு ஒப்படைத்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் வெங்கங்குடி பேருந்து நிறுத்தம் அருகே, காரில் சாக்லேட் மற்றும் குளிர்பானங்கள் மொத்த விற்பனை செய்யும், மண்ணச்சநல்லூர் ராஜாஜி நகரை சேர்ந்த மூக்கன் (வயது 48) என்பவரிடமிருந்து 4,50,000 ரூபாய் ஆவணங்கள் இல்லாத ரொக்கப் பணத்தை பறக்கும் படை அதிகாரி சித்ராதேவி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.

Next Story

‘எனக்கு பிடித்த சேனல்தான் வைக்க வேண்டும்’ - சிறை வார்டன்களுக்கு ரவுடி கொலை மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 rowdy smashed CCTV cameras in Cuddalore Central Jail

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை  கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். பிரபல ரவுடி  எண்ணூர் தனசேகரன் இந்த சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக உதவி ஜெயிலரை, அவரது வீட்டில் சிறைக் காவலர் உதவியுடன், ரவுடி  எண்ணூர் தனசேகரன் பெட்ரோல் குண்டு வீசி  எரிக்க முயற்சி செய்தார். 

இவர் மீது இது குறித்து கடலூர் முத்துநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி எண்ணூர் தனசேகரன் பலமுறை சிறை அதிகாரிகளை கண்டித்து போராட்டங்கள் மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடலூர் மத்திய சிறைச்சாலையில் இரவு கைதிகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது  ரவுடி எண்ணூர் தனசேகரன் தனக்கு பிடித்த சேனலை வைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும் திடீரென்று சிறை வளாகத்தில் இருந்த சிசிடிவி. கேமராக்களை உடைத்துள்ளார். இது குறித்து கடலூர் முத்துநகர் காவல் நிலையத்தில் சிறைத்துறை அதிகாரிகள்  புகார் அளித்தனர். அதில் எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி. கேமராக்களை உடைத்ததாகவும், சிறை வார்டன்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் இதனை கண்டித்து பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.