கடந்த 27 ஆண்டுளாக பாக்கெட் சாராயம் விற்று வந்த பெண் தாதாவை கைது செய்யப்பட்ட சம்பவம் வாணியம்பாடி, திருப்பத்தூர் மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் 1990-களிலேயே சாராய விற்பனையில் இறங்கியவர் மகேஸ்வரி. இதுவரை சுமார் 80 மேற்பட்ட வழக்குகள், அதிலும் 7 முறை குண்டர் சட்டம் என பெண் தாதாவாகவே அறியப்பட்டார் மகேஸ்வரி. சட்டவிரோதமாக மகேஸ்வரி விற்கும் பாக்கெட் சாராய விற்பனை குறித்து போலீசாருக்கு தகவலளிப்பவர்கள் மீது தாக்குதல் மட்டுமில்லாது கொலை வரை செல்லும் அளவிற்கு சம்பவங்கள் நிகழ்ந்து அடிக்கடி வணியம்பாடியை பரபரப்பாக்கும். சில தினங்களுக்கு முன்பு திருவிழாவில் கள்ளச்சாராயம் விற்ற நபர்கள் மீது புகாரளித்த இளைஞர்கள் சிலர் மீது மகேஸ்வரியின் ஆட்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பாக பேசப்பட்டது. இதனை கண்டித்து நேதாஜி நகர் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப்பகுதி இளைஞர்கள் மகேஸ்வரிக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த பாக்கெட் சாராய மூட்டைகளை பறிமுதல் செய்து அழித்தனர். இளைஞர்கள் கைப்பற்றிய சாராய மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்ய முயன்ற நிலையில், மகேஸ்வரி மற்றும் அவரது கும்பலை கைது செய்தால்தான் மூட்டைகளை தருவோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி தொடர்ந்து அதிக எதிர்ப்புகள், போராட்டங்கள் எழுந்த நிலையில் மகேஸ்வரியை கைது செய்ய திட்டமிட்ட போலீசார் அவரை கைது செய்ய முற்பட்டனர்.
மகேஸ்வரி திருவண்ணாமலையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு விசாரணையில் தகவல் வர, அங்கு சென்ற போலீசார் விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் சாராய வியாபாரி மகேஸ்வரி, அவரது கணவர் சீனிவாசன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட மகேஸ்வரியின் அடியாட்களும் கைது செய்யப்பட்டனர். வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது இந்த கும்பலின் கைது.