Skip to main content

ஜிப்மர் வேலைவாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம்!

Published on 21/11/2022 | Edited on 22/11/2022

 

jkl

 

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகளும் நாள்தோறும்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயக்குனர்கள், பேராசிரியர்கள்,  மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஊழியர்கள் போன்ற பணிகளில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை அதிகம் நியமனம் செய்வதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இதனால் தமிழ் மட்டுமே தெரிந்த நோயாளிகள் - மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இடையே நேரடி தொடர்பு இல்லாததால் நோயாளிகள் அவதியடைகின்றனர்.

 

இதையடுத்து ஜிப்மர் மருத்துவக் கல்லூரி பணி இடங்களில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி மாநில அ.தி.மு.க சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜிப்மர் வேலைவாய்ப்புகளில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

 

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் அவர்கள் பேசுகையில் " ஜிப்மர் வேலை வாய்ப்பு விஷயத்தில் பறிபோகும் மாநில உரிமையை தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியாவில் தலை சிறந்த மருத்துவமனை என்ற நிலை மாறி மெல்ல மெல்ல அழிவு பாதைக்கு ஜிப்மர் மருத்துவமனை சென்று கொண்டிருப்பதை தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமையாகும். தற்போது மருத்துவர்கள்,  செவிலியர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் பல்வேறு பணியாளர்களுக்கு அகில இந்திய அளவில் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்யப்படுகிறது. வேலை வாய்ப்பில் புதுச்சேரி மாநிலத்திற்கு தனி இட ஒதுக்கீடு இல்லை. நம் மாநிலத்தில் படித்த இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் வேலை பாதிக்கப்படுகிறது. ஜிப்பர் மருத்துவ கல்வியில் மொத்தமுள்ள 243 இடங்களில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு 54 இடங்கள் அதாவது 26.5 சதவீதம் புதுச்சேரி மாநிலத்திற்கு இட ஒதுக்கீடாக வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கும் ஜிப்மர் நிர்வாகம் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதில்லை.

 

தற்போது 433 பணியிடங்களுக்கு அகில இந்திய அளவில் செவிலியர் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்திய அளவில் தேர்வு நடத்தப்படுவதால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில செவிலியர் படித்துள்ளவர்களுடன் நம் மாணவிகள் போட்டியிடும் நிலை ஏற்படுவதால் நம் மாநிலத்தில் செவிலியர் படிப்பு படித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலை வாய்ப்பு தடுக்கப்படுகிறது. மருத்துவ கல்வியில் 26.5 சதவீதம் புதுச்சேரிக்கு இடஒதுக்கீடு வழங்குவது போன்று வேலை வாய்ப்பிலும் 26.5 சதவீதம் இடங்கள் வழங்கினால் நம் மாநிலம் சார்ந்த சுமார் 115 செவிலியர் படிப்பு படித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும். குருப்-டி பணி புரியும் ஒப்பந்த பணியாளர்களாக கூட வட மாநிலத்தை சேர்ந்தவர்களை இங்கு நியமிக்கும் சூழ்நிலை உள்ளது. தமிழ் மொழி பேசும் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் செவிலியர் பணிக்குக் கூட வேறு மொழி பேசுபவர்களை பணியில் அமர்த்துவதால் தமிழ் பேசும் புதுச்சேரி, தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

 

ஒட்டுமொத்தத்தில் புதுச்சேரி மாநிலத்தின் மாநில உரிமை ஜிப்பர் நிர்வாகத்தால் பறிக்கப்படுவதை முதல்வர், துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு சென்றுள்ளோம். மீண்டும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மூலம் அரசின் கவனத்திற்கு நம்மாநில மக்களின் நலன்களை, உரிமைகளை எடுத்து காட்டுகிறோம். இது சம்பந்தமாக துணைநிலை ஆளுநரும், முதலமைச்சரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தி ஜிப்மரில் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் குறைந்தது 25 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று  தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை புதுச்சேரி மாநிலத்திற்கு தனி இட ஒதுக்கீடு இல்லாமல் தற்போது நடைபெறும் செவிலியர் பணி நியமனத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என கூறினார்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி கிழக்கு மற்றும் மேற்கு மாநில நிர்வாகிகள் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில பேரவை செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர், முன்னாள் மாநில செயலாளர் நடராசன்,  மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், மகாதேவி, கணேசன், திருநாவுக்கரசு, மாநில துணைத் தலைவர் ராஜாராமன், மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் கருணாநிதி, கணேசன், வி.கே.மூர்த்தி, குணசேகரன், கிருஷ்ணமூர்த்தி, காந்தி, நாகமணி, சேரன், மணவாளன், குமுதன்,  மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர்கள் பாண்டுரங்கன், சிவலயா இளங்கோ, மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், மாநில மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராமலிங்கம், மீனவரணி செயலாளர் ஞானவேல், விவசாய அணி செயலாளர் சக்கரவர்த்தி, மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், மாநில வர்த்தக அணி செயலாளர் முத்துராஜீலு, மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ்குமார் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மீண்டும் வெடித்த போராட்டம்; அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
The struggle broke out again and Set fire to the government bus in maharashtra

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா எனும் சமூகத்தினர் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனை ஏற்று கடந்த 2018 ஆம் ஆண்டு, மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதாக அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு அறிவித்தது. ஆனால், மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், மாநில அரசு வழங்கிய இட ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்து தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் மராத்தா சமூகத்தினர் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். இதனிடையே, மராத்தா சமூகத்தின் செயல்பாட்டாளர் மனோஜ் ஜராங்கே, இட ஒதுக்கீடு கோரிக்கையை வைத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். 

அப்போது, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மனோஜ் ஜராங்கேவை சந்தித்து இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதிமொழி அளித்தார். அதனை ஏற்று மனோஜ் ஜராங்கே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார். ஆனால், அப்போது இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறப்பட்டது. அதனால், மனோஜ் ஜராங்கே மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய போது மராத்தா சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு, ரோட்டில் டயர்களை தீ வைத்து எரித்தனர். மேலும், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரகாஷ் சோலங்கியின் வீடு மற்றும் வாகனங்களுக்குத் தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதனையடுத்து, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில், தனிப் பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 20ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவின் கீழ் மராத்தா சமூகத்துக்கான இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்றும், மராத்தா சமூகத்தினர் குன்பி சாதியை சேர்ந்தவர்கள் என்ற அறிவிப்பை சட்டமாக இயற்றி நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனோஜ் ஜாரங்கே மற்றும் ஆதரவாளர்கள் ஜல்னா மாவட்டம், அந்தர்வாலி சாரதி கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று (26-02-24) காலை, ஜல்னா மாவட்டத்தில் உள்ள தீர்த்தபுரி நகரின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் சவுக்கில் போராட்டக் குழுவினர், அங்கு நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது தீ வைத்து எரித்துள்ளனர். மேலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, சகால் மராத்தா சமாஜ் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, மனோஜ் ஜாரங்கே போராட்டத்துக்கு ஆதரவாளர்கள் கூடுவதை தவிர்க்க ஜல்னா, சத்ரபதி, சம்பாஜி நகர், பீட் ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அம்பாட் தாலுகாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.