Skip to main content

மறைந்திருந்த டிஎஸ்பி; கையும் களவுமாக சிக்கிய அதிமுக பிரமுகர்!

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

AIADMK panchayat president caught while accepting bribe

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ளது கீழக்கோட்டை ஊராட்சி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய தந்தையான மணிமுத்து என்பவருக்கு கல்லல் கிராமத்தில் சொந்தமாக வீடு, நிலங்கள் ஆகியவை இருக்கின்றன. அத்தகைய சொத்துக்களை பாலாஜி தன்னுடைய பெயருக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்துள்ளார்.

 

அதுமட்டுமின்றி, அந்த சொத்துக்களை பாலாஜி தன்னுடைய பெயருக்கு மாற்றிய பிறகு, அதற்கான வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும் என கல்லல் ஊராட்சி மன்றத்தை அணுகியுள்ளார். அந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர் நாச்சியப்பன். இவர், அதிமுக கட்சியில் கல்லல் நகரச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அந்த ஊரில் நாச்சியப்பன் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில், பாலாஜியின் மனுவை ஆராய்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் நாச்சியப்பன், "வீட்டு வரி ரசீதை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றால் 13 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி, "எதுக்கு சார் லஞ்சம் கொடுக்கணும். இது எங்கப்பாவோட வீடு. அதுக்கு நா எதுக்கு லஞ்சம் கொடுக்கணும்" என வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு பதிலளித்த நாச்சியப்பன், "ஓ நீ அவ்வளவு பெரிய ஆளா? சரி நீ உன்னால முடிஞ்சத பாத்துக்கோ" என அதட்டலுடன் கூறியுள்ளார்.

 

மேலும், ஊராட்சி மன்றத் தலைவரின் இந்த பேச்சால் அதிர்ந்து போன பாலாஜி, என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போயுள்ளார். அதன்பிறகு, ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட பாலாஜி, சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து, அதிகாரிகள் கூறிய ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய 13 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு ஊராட்சி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, பாலாஜி தான் வைத்திருந்த பணத்தை நாச்சியப்பனிடம் கொடுக்கும்பொழுது, அவர் தன்னுடைய கார் டிரைவரான சங்கரிடம் கொடுத்துவிடும்படி கூறியுள்ளார். அதன்பிறகு, பாலாஜி அந்த பணத்தை சங்கரிடம் கொடுக்கும்பொழுது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி ஜான் பிரிட்டோ தலைமையிலான மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், ஊராட்சி மன்றத் தலைவரான நாச்சியப்பன் மற்றும் கார் ஓட்டுநரான சங்கர் ஆகிய இருவரையும் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

 

இதையடுத்து. அவர்களை கைது செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, சாதாரண வீட்டு வரி ரசீதுக்காக அதிமுக பிரமுகர் ஒருவர் லஞ்சம் வாங்கிய சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.