Skip to main content

'அதிமுக-பாஜக கூட்டணி வலுவாக உள்ளது'; பாஜக கருத்து; குழப்பத்தில் தொண்டர்கள்

Published on 18/09/2023 | Edited on 18/09/2023

 

 'AIADMK-BJP alliance is strong'; BJP opinion; Volunteers in confusion

 

இந்தியாவில் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் அதிமுகவும், பாஜகவும் தமிழகத்தில் மோதிக்கொள்கின்றன. சமீப காலமாக அதிமுக - தமிழக பாஜக இடையே  வார்த்தை போர் நிலவி வருகிறது. தமிழக தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் தலைவரான ஜெயலலிதா குறித்து பேசியது அக்கட்சி தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுக தலைவர்கள் பாஜகமீதும், அண்ணாமலை மீதும் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தனர். பின்னர் இருகட்சித் தலைவர்களையும் அழைத்து டெல்லி தலைமை பேசிய பிறகு வார்த்தை போர் சற்று தணிந்திருந்தது. இது தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.

 

சமீபத்தில் பேரறிஞர் அண்ணா குறித்தும் அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இதையடுத்து அண்ணா குறித்துப் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சி.வி. சண்முகம் போன்றவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இது தொடர்பாக மாறி மாறி இரு கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

 'AIADMK-BJP alliance is strong'; BJP opinion; Volunteers in confusion

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயகுமார், “அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தற்போது இல்லை. தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பா.ஜ.க.வுக்குத் தான் பாதிப்பு. தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நோட்டாவை கூட தாண்ட முடியாது. பா.ஜ.க.வுக்கு காலே இல்லை; எப்படி தமிழ்நாட்டில் காலூன்றும்? எங்களை விமர்சிக்கும் பா.ஜ.க.வை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும்? கூட்டணி கட்சியை விமர்சித்தால் தேர்தலில் தொண்டர்கள் எப்படி ஒன்றிணைந்து வேலை செய்வார்கள்? கூட்டணி தர்மத்தை மீறி அண்ணாமலை பேசி வருவதை அ.தி.மு.க. தொண்டர்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; சிங்கக் கூட்டத்தை பார்த்து சிறுநரி அண்ணாமலை ஊளையிடுகிறது; அண்ணாமலையைத் திருத்துங்கள் என்று பா.ஜ.க. மேலிடத்தில் கூறிவிட்டோம்; பா.ஜ.க. தேசிய தலைமை சொல்லியே அண்ணாமலை தனது பேச்சை நிறுத்தாவிட்டால், தாறுமாறாக விமர்சனம் செய்வோம்” என்றார்.

 

தொடர்ந்து செய்தியாளர்கள், 'இது உங்கள் கருத்தா அல்லது கட்சியின் கருத்தா' என கேட்க, இதுதான் கட்சியின் கருத்தும் என தெளிவாக ஜெயக்குமார் விளக்கம் அளித்திருந்தார். அப்பொழுது சுற்றி இருந்த அதிமுக தொண்டர்கள் அந்த நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் ஆரவாரம் செய்தனர். அதற்கு ஜெயக்குமார் ''பாருங்கள் எப்படி ஆரவாரம் செய்கிறார்கள்'' என்றார்.

 

nn

 

இந்நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியில் இருப்பதாக பாஜக கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள விளக்கத்தில், 'தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணி தொடர்பான முடிவுகள் அதிமுக பாஜக தலைமையால் மட்டுமே தீர்மானிக்கப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளும் வெற்றி பெறும்' என தெரிவித்துள்ளார்.

 

இந்த தெளிவில்லாத முரண்பட்ட கருத்துக்களால் அதிமுக பாஜக தொண்டர்கள் கூட்டணி முறிவா அல்லது நீடிக்கிறதா என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்