Skip to main content

மீண்டும் கைது; வதந்தியால் வெறிச்சோடிய கொத்தமங்கலம்!!

Published on 04/12/2018 | Edited on 04/12/2018

கொத்தமங்கலத்தில் மீண்டும் கைது என்று வதந்தி பரவியதால் கடைகள் வீடுகளை அடைத்துவிட்டு மக்கள் வெளியேறியதால் பரபரப்பு பற்றியது மட்டுமல்லாமல் கடைவீதிகள் வெறிச்சோடியது.

 

 

கொத்தமங்கலத்தில் அரசு வாகனங்கள் எரிக்கப்பட்ட வழக்கில் மீண்டும் போலிசார் கைது நடவடிக்கைக்கு வந்துள்ளதாக பரவிய வதந்தியால் கடைகள் அடைக்கப்பட்டதுடன் பலர் வீடுகளையும் பூட்டிவிட்டு வெளியேறியதால் கடைவீதி வெறிச்சோடியது.

 

Rumor

 

கஜா புயலால் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் தென்னை, மா, பலா, வாழை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் புயல் பாதிக்கப்பட்டு சில நாட்கள் வரை மீட்புக்குழுவினரோ அதிகாரிகளோ யாரும் வரவில்லை என்று கீரமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், கொத்தமங்கலம், பனங்குளம், பெரியார் விலக்கு சாலை மற்றும் பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

 

இரவு பகலாக மறியல் போராட்டம் நடந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கொத்தமங்கலத்தில் மறியல் நடந்த இடத்திற்கு 5 வாகனங்களில் வந்த அதிகாரிகளுடன் புயல் பாதித்து 2 நாட்களுக்கு பிறகு இரவில்தான் புயல் பாதிப்பு பார்க்க வந்தீர்களா என்று மக்கள் வாக்குவாதம் செய்த நிலையில் அந்த 5 அரசு வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது. சில அதிகாரிகளுக்கும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் போலிசார் தடியடி நடத்தி கிராமங்களுக்குள் சென்று 62 பேரை கைது செய்தனர். அந்த 62 பேரும் தற்போது நிபந்தனை ஜாமினில் கீரமங்கலம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகின்றனர்.

 

 

Rumor

 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொத்தமங்கலம் கிராமத்தில் இயல்புநிலை திரும்பிய நிலையில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு பஸ் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொத்தமங்கலத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் கொத்தமங்கலத்தில் நடந்த சம்பவத்தால் மக்கள் மீது கோபம் இல்லை. அதனால் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய நிவாரணம் மற்றும் நலத்திட்டங்கள் தடையின்றி கிடைக்கும் என்றார்.

 

 

இந்த நிலையில் செவ்வாய் கிழமை மதியம் கொத்தமங்கலம் நோக்கி ஏராளமான போலிசார் வருகிறார்கள். மீண்டும் கைது நடவடிக்கை தொடரப்போகிறது என்று யாரோ பரப்பிய தகவல் கடைவீதியில் பரவியதுடன் கிராமத்திற்குள்ளும் பரவியதால் கடைவீதியில் இருந்த அனைத்துக் கடைகளும் அவசர அவசரமாக அடைக்கப்பட்டு வியாபாரிகளும் கடைவீதியில் நின்ற பொதுமக்களும் வெளியேறினார்கள். அதே கடைவீதியை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள சில வீடுகளும் அடைக்கபட்டடு இளைஞர்கள் வெளியேறினார்கள். இதனால் கடைவீதி வெறிச்சோடியது. அதன் பிறகு இந்த தகவல் வதந்தி என்று போலிசாரும் சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதனும் கிராம மக்களிடம் தெளிவுபடுத்தினார்கள். அதன் பிறகு கடைவீதியில் உள்ள பொது ஒலி பெருக்கியில் விளம்பரம் செய்து வதந்தியை நம்ப வேண்டாம் அனைவரும் வந்து கடைகளை திறக்கலாம் என்று அறிவிப்பு செய்யப்பட்ட பிறகு மீண்டும் கடைகள் திறக்கப்பட்டது. வதந்தியால் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் வெளியேறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்