Skip to main content

62 வருடங்களுக்குப் பிறகு தென்காசியை வசமாக்கிய ஸ்டாலின்

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

எண்ணிக் கூட பார்க்க முடியாத ஆச்சர்யம். தேசம் சுதந்திரம் அடைந்த பி்ன் 1957ஆம் ஆண்டு முதல் தற்போது 2019 நடந்த தேர்தல் வரை 62 வருடங்களுக்குப் பிறகு தென்காசி பார்லிமெண்டில் உதய சூரியன் உதிக்கக் காரணமானவர் தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின். கடந்த தேர்தல்கள் வரை தென்காசியைக் கைப்பற்றக் கூட்டணிக் கட்சிகளுக்கே தி.மு.க. தலைவர் கலைஞரின் ஆதரவுக்கரம் இருந்தது.

 

dmk

 

அவரது ஆதரவு காரணமாக 1996 ல் காங்கிரஸ், பின் காங்கிரஸ் பிளவுபட்டு த.மா.க சார்பில் நின்ற அருணாசலம், அதன் பின் சி.பி.ஐ சார்பில் போட்டியிட்ட அப்பாத்துரை போன்றவர்களே கலைஞரின் கருணையால் எம்.பி. ஆனார்கள். 1962 ல் காங்கிரசின் சாமி, 1967ல் காங்கிரசின் ஆறுமுகம், 1971ல் காங்கிரஸின் செல்லச் சாமி, 1977ல் அருணாசலம், தொடர்ந்து வந்த தேர்தல்களிலும் அவரே காங்கிரஸ் எம்.பி யாக நீடிக்க 1957 முதல் 1996 வரை காங்கிரசின் கோட்டையாக இருந்தது தென்காசி. அதன்பின் அ.தி.மு.க வசம் சென்று அக்கட்சி மூன்று தடவையாக கடந்த 2014 தேர்தல் வரை தக்க வைத்திருந்தது.

 

dmk



இதற்கு மத்தியில் 1991ல் தி.மு.க.வின் சூரியன் சின்னத்தில் புளியங்குடியின் சதன் திருமலைக்குமாரை களமிறக்கினார் கலைஞர். ஆனால் சொற்ப வாக்குகளில் வாய்ப்பு நழுவியது. பின்பு கூட தி.மு.க  ஆதரவு பெற்ற கூட்டணிக் கட்சியினரே எம்.பி.யானார்களேத் தவிர, தி.மு.க.வின் சின்னமான உதய சூரியன் வசம் போகவில்லை.

 



அதிசயம். 62 வருடங்களுக்குப் பிறகு கலைஞர் மறைவின் பின் நடந்த முதல் தேர்தலிலேயே தென்காசி பார்லியில் உதய சூரியனைக் களமிறக்கி, ஒற்றை மனிதராய் ஊர் ஊராய் பயணப்பட்டு, வியர்வையைக் கொட்டிய ஸ்டாலின், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 286 வாக்குகள் வித்தியாசத்தில் சூரியனைத் தென்காசியில் உதிக்க வைத்திருக்கிறார்.



அதற்கு கலைஞரின் உத்தி கைகொடுத்தாலும், தந்தையையும் மிஞ்சியிருக்கிறார் தனயன் ஸ்டாலின்.

 

 

சார்ந்த செய்திகள்