தென்மண்டல கவுன்சிலில் 30-வது கூட்டம் கேரளா தலைநகரம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது முல்லைப் பெரியாறு அணை, நதிநீர் பங்கீடு, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை போன்ற விவகாரங்கள் தொடர்பாக இருவரும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அமித்ஷா தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு தொகை வழங்கும் காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும். ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு எப்பொழுதும் உறுதியாகவே இருக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. மின்வாரிய மசோதாவை கைவிட வேண்டும் என்றும் வெள்ள பாதிப்புக்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பேசிய அவர் அண்டை மாநிலங்களை இணைக்கும் வகையில் ரயில் வழித்தடங்களை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரம் முழுவதையும் கொள்முதல் செய்ய மாநில அரசு தயாராக உள்ளது என்றும் கூறினார்.
மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் தென் மாநிலங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. தென்மாநில மொழிகள் திராவிட மொழிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் நம் அனைவரும் ஒன்றிணைந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாதையில் பயணிப்போம் என்றும் தென்மாநில முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தென்மாநிலங்களில் உளவுத்துறை இணைந்து செயல்படவும் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தென்மாநில முதலமைச்சர்கள் இணைத்தது செயல் படவேண்டும் என்றும் கூறியுள்ளார். அடுத்த தென்மண்டல கூட்டத்தை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.