Skip to main content

"ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை" - ஓ.பி.எஸ். விமர்சனம்!

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

admk leader opaneerselvam statement coronavirus prevention

 

தமிழகத்தில் கரோனா ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று (21/05/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா என்னும் உயிர்க்கொல்லி தொற்றின் இரண்டாம் அலை தற்போது கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருப்பதையடுத்து, பொதுமக்கள் ஒருவித அச்ச உணர்வோடு வாழ்ந்துகொண்டிருக்கும் அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு இன்னும் துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக மக்கள் மிகப்பெரிய ஆபத்தைச் சந்திக்கும் நிலை ஏற்படும்.

 

கரோனா தொற்று நோய் தாக்கினால் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணங்களாக விளங்குபவை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி இல்லாமை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, வெண்டிலேட்டர் தட்டுப்பாடு ஆகியவைதான். இவற்றைப் போக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருவதாக செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், யதார்த்த நிலை என்பது வேறாகத்தான் இருக்கிறது. இன்னும் மருத்துவத் தேவை பூர்த்தியாகவில்லை. 

 

இன்றைய நிலவரப்படி, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த ஆண்டு மே மாதம் ஒன்றாம் நாள் 19,558 என்று இருந்த தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 20/05/2021 அன்று 35,579 ஆக உயர்ந்திருக்கிறது. இதேபோன்று 147 ஆக இருந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, தற்போது 397 ஆக உயர்ந்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கரோனா தொற்று நோய் தமிழகத்தில் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, 20/05/2021 அன்று மாலை நிலவரப்படி 35,579 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,368 என்ற அளவில்தான் இருக்கிறது.

 

கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 10/05/2021 காலை 04.00 மணி முதல் 24/05/2021 காலை 04.00 மணி வரை இரண்டு வார காலத்திற்கு ஊரடங்கு அறி/விக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், 15/05/2021 காலை 04.00 மணி முதல் 24/05/2021 காலை 04.00 மணி வரை மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்றால் நிச்சயம் இல்லை. இதன் காரணமாக, கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டேவருகிறது. ஊரடங்கிற்கு முன்பு, அதாவது 09/05/2021 அன்று கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,897 ஆக இருந்தது. ஆனால், இன்று அது 35,579 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், ஊரடங்கிற்கு முன்பு, அதாவது 09/05/2021 அன்று 236 ஆக இருந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 397 ஆக உயர்ந்துவிட்டது. கரோனா இரண்டாவது அலையில், டெல்லியில் 26,000 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 3,231 என்ற அளவிற்கு குறைந்துவிட்டது. இவ்வாறு குறைந்ததற்கு காரணம் ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தியதுதான். இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நாளைக்கு 65,000க்கும் மேலிருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 34,031 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. அதே சமயத்தில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அதிகரித்துக்கொண்டேவருகிறது.

 

ஊரடங்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளக்கவ்வளவு தடுப்பூசி போடுவதும் இன்றியமையாதது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி, ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 51,52,220 என்றும், இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 19,30,160 என்றும், ஆக மொத்தம் 70,82,380 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன என்றும், அதே சமயத்தில், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், கேரளா, ஆந்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தமிழகத்தைவிட அதிக அளவில் தடுப்பூசிகளை மக்கள் போட்டுக்கொண்டுள்ளார்கள் என்றும் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்கள் ஆகியவை தங்கு தடையின்றிக் கிடைக்கவும், பெயரளவிற்கு இருக்கிற ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வினை மக்களிடம் எடுத்துச் செல்லவும், தடுப்பூசியினை அதிக அளவில் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

கருப்பு பூஞ்சை நோயினை தொற்று நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது என்றாலும், 'முளையிலே கிள்ளி எறி' என்ற பழமொழிக்கேற்ப, இந்தத் தொற்றினை ஆரம்பத்திலேயே போக்கும் வகையில் அதற்குரிய மருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.