
அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளர் உட்பட அதிமுகவினர், பெண்கள் கல்லூரியில் அனுமதியின்றி நுழைந்து கழிவறை சுத்தம் செய்வது போல் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளராக ராதிகா என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் மற்றும் அதிமுக பிரமுகர் சாந்தி உட்பட 20 பேர் வாலாஜாபாத்தில் உள்ள கல்லூரியில் அனுமதியின்றி நுழைந்துள்ளனர். மேலும், அங்கு பயன்படுத்தப்படாமல் இருந்த கழிவறையை சுத்தம் செய்வதுபோல வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த சமூக வலைத்தளப் பதிவில், கழிவறை சுத்தமாக இல்லை என்று அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பெயரில் அதிமுகவினரே புகார் கூறி பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.