சென்னை தியாகராய நகர் சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்திய நாராயணன் தன்னுடைய பதவிக் காலத்தில் தொகுதி நிதியை செலவிட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆர்வலர் அரவிந்தாக்ஷன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், 2016- 17 ஆம் ஆண்டு உள்விளையாட்டு அரங்கம் கட்டியதில் மோசடி செய்துள்ளார். 2017- 18 ஆம் நிதி ஆண்டில் அரசாணைக்கு புறம்பாக அந்த ஆண்டுக்கான நிதி 2 கோடி ரூபாய்க்கும் ஒரே ஒப்பந்ததாரர் மூலமாக சாலை அமைத்தது. 2018- 19 ஆம் ஆண்டு நிதியில் 30 லட்ச ரூபாய்க்கு கட்டிடமே கட்டாமல் செலவு கணக்கு மட்டுமே எழுதியது என தொடர்ச்சியாக மூன்று நிதியாண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிட்டதில் விதி மீறல்களும், அதிகமான முறைகேடும் செய்துள்ளார் என ஆதாரத்தோடு கடந்த ஜனவரி மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்திருந்தார்.
ஆனால் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஜூலை மாதம் 20- ஆம் தேதி பதிலளிக்க வேண்டுமென லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி நிர்மல்குமார் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சத்தியநாராயணன் முறைகேடு செய்யதாக தொடரப்பட்ட அந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சட்டப்படியான விசாரணை தொடங்கிவிட்டதாக தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.டி.பெருமாள், விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடவேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நிர்மல்குமார் அடுத்த மாதம் 27- ஆம் தேதி விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டுமென லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.