Skip to main content

“மனித வெடிகுண்டா மாறுவேன்...” ; கொந்தளித்த உதயகுமார் - போஸ்டரால் பரபரப்பு

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

admk ex minister rp udhayakumar issues

 

அதிமுக முன்னாள் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் திருப்பூர் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்தில் சிவகங்கையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 11 ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் சென்றுள்ளார். அப்போது, எடப்பாடியுடன் விமான நிலைய பேருந்தில் பயணித்த அமமுகவை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர், அண்ணன் எடப்பாடியார் என அவரைக் கூப்பிட்டு... எடப்பாடி பழனிசாமியின் முகத்திற்கு நேராக... துரோகத்தின் அடையாளம், சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர்" என பல்வேறு கோஷங்களை எழுப்பிக்கொண்டு ஃபேஸ்புக்கில் லைவ் டெலிகாஸ்ட் செய்துள்ளார். 

 

ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த எடப்பாடியின் பாதுகாவலர் ஒருவர், அந்த இளைஞரின் செல்போனை பிடுங்கிக்கொண்டு அவரைத் தாக்கியுள்ளார். மேலும் இந்த விவகாரம் எடப்பாடி ஆதரவாளர்களுக்கு தெரிய வரவே, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் அமமுக கட்சியைச் சேர்ந்த நபரை சரமாரியாக தாக்கி விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, ராஜேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவரை தாக்கியதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த  13ம் தேதியன்று மதுரை பழங்காநத்தத்தில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

அப்போது, பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "திமுகவின் சர்வாதிகார போக்கு தொடர்ந்தால்... அதிமுக தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள். நாங்கள் ஜெயிலுக்கு போவதற்கு பயந்தவர்கள் இல்லை. பல ஜெயில்களை நாங்கள் பார்த்துள்ளோம்" என பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இந்நிலையில், தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய ஆர்.பி. உதயகுமாரை கைது செய்ய வேண்டும் என திமுக சார்பில் சுப்ரமணியபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஓபிஎஸ் அணியை சேர்ந்த திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் அமைச்சர் உதயகுமாரை கண்டித்தும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.