Skip to main content

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் மாதம் ரூ. 2 லட்சம் கேட்டு நடிகை வழக்கு..! 

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

  Actress Santhini sues for Rs 2 lakh Former Minister Manikandan

 

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியதாகவும், கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

இதையடுத்து, மணிகண்டனை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல்துறையினர் கடந்த மாதம் 20ஆம் தேதி கைது செய்தனர்.

 

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த நிலையில், மணிகண்டனிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

 

அந்த மனுவில், ‘திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும்போது பிரச்சினை ஏற்பட்டால் இழப்பீடு கோருவதற்கான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளேன். என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி மோசடி செய்ததால் உடல் அளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். மன உளைச்சல் காரணமாக மணிகண்டன் எனக்கு ரூ. 10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் வீட்டு வாடகை, மருத்துவ செலவு உள்ளிட்ட இடைக்கால நிவாரணத் தொகையாக மாதந்தோறும் ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். 

 

நடிகை சாந்தினி தொடர்ந்த இந்த வழக்கு, அடுத்த மாதம் 5ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எதிர்பார்ப்பை உருவாக்கிய மத்தகம்

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

Atharva , Manikandan Mathagam release date announced

 

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள மத்தகம் வெப் சீரிஸை, இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் ராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி) உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ளார். 

 

இந்த வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில், அண்மையில் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்போது வரை யூட்யூபில் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

 

இந்த சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வருகிற 18 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் இந்த சீரிஸ் வெளியாகிறது. 

 

 


 

Next Story

முன்னாள் அமைச்சர் vs ஒன்றிய செயலாளர்; அதிமுகவினரிடையே மோதல் 

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

Clash between aiadmk Manikandan and MaruthuPandian supporters

 

அதிமுக ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் மற்றும் ஒன்றியச் செயலாளர் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அதிமுக சார்பில் விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், ராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆதரவாளர்களுக்கும், ஒன்றியச் செயலாளர் மருது பாண்டியன் ஆதரவாளர்களுக்கும் இடையே கோஷம் போடுவது, விசில் அடிப்பதில் மோதல் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடிதடியாக மாறியது. இருதரப்புக்கும் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீசார் தகராற்றில் ஈடுபட்ட சுரேஷ் என்பவரை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இரு தரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேசிய மாவட்டச் செயலாளர் முனியசாமி, “உட்கட்சி பிரச்சினையை மனதில் வைத்துக்கொண்டு பொது இடத்தில் தகராற்றில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. நடந்த சம்பவம் குறித்து கட்சித் தலைமையிடம் புகார் அளிக்கப்படும்” என்றார்.