Skip to main content

முதல்வர் உத்தரவின்பேரில் ஐந்தே நிமிடத்தில் நடவடிக்கை... மகிழ்ச்சியில் பள்ளி முதல்வர், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள்!!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

Action in the fifth minute on the order of the cm ..... school principal, students, parents and teachers are in joy

 

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சீதா கிங்ஸ்டன் பள்ளி செயல்பட்டுவந்தது. இந்தப் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து கடந்த 1999 ஆண்டு வரை குத்தகை எடுத்து  நிர்வகித்துவந்தனர். 1999க்கு பிறகு மாத வாடகையாக ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் கட்டி நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. பள்ளி நஷ்டத்தில் இயங்கியதால், கடந்த ஆட்சியில் பள்ளியின் அனுமதியை நிறுத்திவைத்தனர். பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பல போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகளை சந்தித்து மனுவும் கொடுத்துள்ளனர். ஆனால் அரசு தரப்பில் பள்ளியை மீண்டும் இயக்க அனுமதி தராததால் பள்ளி சில ஆண்டுகளாக மூடியே கிடந்தது. 

 

இத்தகவல் தற்போது பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு செல்ல, அரசே பள்ளியை ஏற்று நடத்தும் என அறிவித்தார். இதனையொட்டி முதல்வரின் ஆணைக்கிணங்க இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, பள்ளிக்கல்வி ஆணையர், அறநிலையத்துறை ஆணையர்  ஆகியோர் நேற்று (15.06.2021) மாலை பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டுப் பள்ளியை மீண்டும் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். பின்னர் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்தைக் கேட்டு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார் அமைச்சர். பின்னர் பள்ளியின் சாவியை முதல்வர் நிர்மலா கௌரியிடம் ஒப்படைத்தார்.

 

Action in the fifth minute on the order of the cm ..... school principal, students, parents and teachers are in joy

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர்  கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் குத்தகையின் அடிப்படையில் கலவலகண்ணன் செட்டி சாரிடபுள் டிரஸ்ட் சார்பில் சீதா கிங்ஸ்டன் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றுவந்தது. இந்தப் பள்ளியின் குத்தகை காலம் முடிவடைந்ததையடுத்து, வாடகை பணத்தைச் செலுத்த முடியாமல் பள்ளியின் நிர்வாகம் இருந்து வந்தது. அதன் அடிப்படையில்  78 சட்டப்பிரிவின்படி இந்த இடத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த சென்ற ஆண்டே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் பள்ளியின் நிர்வாகத்தினர் நீதிமன்றத்தை அணுகியதை அடுத்து ஓராண்டு பள்ளியை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

 

அந்த ஓராண்டு முடிவுற்ற நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சாரிடபுள் டிரஸ்டை அணுகி பேசினோம். அப்போது தங்களால் தொடர்ந்து பள்ளியைத் தொடர முடியாத சூழ்நிலையையும் பொருளாதார நெருக்கடியையும் கருத்தில்கொண்டு பள்ளியை அரசிடம் ஒப்படைக்கவுள்ளதாக கூறினர். இந்தப் பள்ளியிலே 750 மாணவச் செல்வங்களும், 57 ஆசிரியர்களும் ஊழியர்களும் உள்ளனர். திடீரென்று பள்ளியை நிர்வகிக்க முடியாததால் இதனை முதல்வரின் கவனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கொண்டு சென்றது. முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஐந்து நிமிடங்களில் இந்தப் பள்ளியை அரசே எடுத்து நடத்தும் என்று கூறியதை ஏற்று, இந்தப் பள்ளியின் மாணவர்கள், பெற்றோர்கள் சார்பிலும் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பிலும் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியை மன மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

 

Action in the fifth minute on the order of the cm ..... school principal, students, parents and teachers are in joy

 

பள்ளியைப் பற்றி கூறும்போது சொல்வார்கள், ஓராண்டு பலன் வேண்டுமா நெல்லை நட வேண்டும், பத்தாண்டு பலன் வேண்டுமா அதற்கு மரத்தை நட வேண்டும், நூறாண்டு பலன் வேண்டுமா அதற்கு கல்வியைத் தர வேண்டும் என்பார்கள். அந்த நூறாண்டு வாழ்கின்ற கல்வியை இந்தப் பள்ளிக்கு முதல்வர் வழங்கியதற்காக மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதற்கு முன்னர் இந்தப் பள்ளி சாரிடபுள் டிரஸ்ட் மூலம் எவ்வாறு நடத்தப்பட்டதோ அதேபோன்று தற்போதும் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பிலும் நடத்தப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளையும், பள்ளிக்குத் தேவைப்படும் உதவிகளையும் செய்து கொடுக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். 

 

அந்தவகையில், தேவையான அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு இன்றில் இருந்தே தொடங்கி நிறைவேற்றித் தருவோம். 750 மாணவர்கள் இந்தப் பள்ளியில் தற்போது பயில்கிறார்கள். அடுத்த ஆண்டு இந்த பள்ளியின் தரத்தை மேலும் உயர்த்தி, கூடுதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்வோம். முழு நேரமும் இந்து சமய அறநிலையத்துறையின் பார்வையும், ஆணையரின் பார்வையும் இந்தப் பள்ளியின் மீது வைத்து, இங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவித்தார். அப்போது சாவியைப் பெற்றுக்கொண்ட பள்ளி முதல்வர் ஆனந்தக் கண்ணீர்விட்டு தமிழ்நாடு முதல்வருக்கும் அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.