Skip to main content

ஆவின் பால் கலப்பட வழக்கு: ஆதாரம் இல்லாததால் வைத்தியநாதன் உள்பட 3 பேர் விடுவிப்பு: ஐகோர்ட் உத்தரவு

Published on 09/04/2018 | Edited on 09/04/2018
aavin milk


 

ஆவின் பால் கலப்பட வழக்கிலிருந்து ஆவின் வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி உள்ளிட்ட மூன்று பேரை சென்னை உயர் நீதிமன்றம் விடுவித்ததுள்ளது.
 

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு டேங்கர் லாரியில் பால் கொண்டு வருவது வழக்கமான ஒன்றாகும். இவ்வாறு கொண்டுவரப்பட்ட பாலை திருடிக் கொண்டு, அதற்கு பதிலாக தண்ணீரை கலந்தது போலீசார் சோதனையின் போது தெரியவந்தது.      
 

இதுதொடர்பாக, விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபட்டி போலீசார் கடந்த 2014 ல் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இவ்வழக்கு  விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் கலப்பட பாலை கொண்டு சென்ற லாரி நிறுவன உரிமையாளரும் அப்போதைய அதிமுக மாவட்ட செயலாளரான வைத்திய நாதன் உள்ளிட்ட 28 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 
 

இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கேட்டு, வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி, அப்துல் ரஹீம் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இம்மூவர் தரப்பிலும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.  
 

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சி.டி. செல்வம் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். பிரதான மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, வழக்கில் இருந்து, மனுதாரர்கள் வைத்தியநாதன், ரேவதி, அப்துல் ரஹீம் ஆகிய மூவரையும் விடுவித்து உத்தரவிட்டார். 
 


அந்த உத்தரவில், " இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு  எதிரிகளை விசாரணை நீதிமன்றம் விடுவித்துள்ளது. இவ்விருவரும், மனுதாரர்களிடம் வேலைப் பார்த்து வந்தவர்கள். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான், இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. ஆனால், அந்த இருவரும் வழக்கில் இருந்து விடுவித்த பின்னர், எப்படி இவ்வழக்கை தொடர்ந்து நடத்த முடியும். மேலும், ஆவின் பாலில் கலப்படம் செய்ததற்கான ஆதரமோ, திருட்டு நடந்ததற்கான  ஆதாரமோ இல்லாத நிலையில்,  வழக்கை தொடரந்து விசாரணை நடத்துவது என்பது  நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயலாகும்" என்று நீதிபதி தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாலையோர வியாபாரி மீது பாய்ந்த 'பாரதிய நியாய சன்ஹிதா'- அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டங்கள்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 'Bharatiya Nyaya Sanhita' on Roadside Vendor - New Criminal Laws Come Into Force

புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதியான (01/07/2024) இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கம்லா மார்க்கெட் பகுதியில் சாலையோர கடை நடத்தி வந்த ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக 'பாரதிய நியாய சன்ஹிதா' எனும் புதிய குற்றவியல் சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எழுதி இருந்த கடிதத்தில் 'மத்திய அரசின் மூன்று சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க தங்களுக்கு (மாநிலங்களுக்கு) அவகாசம் தரப்படவில்லை. இந்த மூன்று சட்டங்களுக்கும் எந்த ஆலோசனையும் இல்லாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு சில சிக்கல்கள் உள்ளது.

எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாமலேயே புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளது. எனவே புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார். இந்தநிலையில் புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் இன்று அமலுக்கு வந்ததோடு டெல்லியில் முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மக்களுக்காக போராடுபவர்கள்; ரவுடி பட்டியலில் சேர்த்து பழி வாங்கும் காவல்துறை!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
 Those who fight for the people; The police will take revenge by adding it to the list of raiders!

ஒடுக்கப்படும் மக்களுக்காக போராடுகிறவர்களை பொய் வழக்கு போட்டு சிறை அனுப்புவதை சில சமயம் காவல்துறை செய்வதுண்டு, இதே போல் மயானம் செல்ல அடிப்படை வசதி செய்து தர போராடிய விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவரை ரவுடி பட்டியலில் இணைத்து பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது காவல்துறை.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது பூவலை கிராமம். சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இந்த கிராமத்தின் ஒரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த இருளர் இன மக்கள் பல தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த 28 சென்ட் பரப்பளவிலான மயானம் மற்றும் மயானத்துக்கு செல்லும் பாதை ஆகியவற்றை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. இதனால், பூவலை இருளர் இன மக்களில் யாராவது ஒருவர் உயிரிழந்தால், உடலை பல்வேறு இன்னலுக்கு இடையே மயானத்தில் புதைத்தல் மற்றும் எரியூட்டும் நிலை நீடித்து வந்தது.

இது தொடர்பாக, இருளர் இன மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சார்பில், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டன. வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை, உயிரிழந்தவரின் உடலோடு போராட்டம் என பல போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இது தவிர இந்த பிரச்சனை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், பூவலை கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 28 சென்ட் நிலம், இருளர் இன மக்களின் மயான நிலம் எனவும், மயானத்துக்கு செல்லும் வழி உட்பட, மயானத்தையொட்டியுள்ள சுமார் 4.70 ஏக்கர் நிலம் அனாதையாக விடப்பட்ட நிலம் எனவும் அறிவித்தது.

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், கடந்த 2021-ம் ஆண்டு பூவலைகிராமத்தில் உள்ள சம்பந்தப்பட்ட 28 சென்ட் நிலத்தை மயானம் எனவும், மயானத்தை ஒட்டியுள்ள, மயான பாதை உட்பட 4.70 ஏக்கர் நிலத்தைபுஞ்சை அனாதையாக விடப்பட்ட நிலம் எனவும், கும்மிடிப்பூண்டி வட்டம் மற்றும் பூவலை கிராம கணக்குகளில் உரிய மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வருவாய்த் துறையினர், ’சம்பந்தப்பட்ட நிலங்களில் உள்ள சுற்றுச் சுவரை அகற்றி, நிலத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது’ என்ற எச்சரிக்கை பலகையும் வைத்தனர்.

 Those who fight for the people; The police will take revenge by adding it to the list of raiders!
விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அருள்

இந்த போராட்டங்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்தது. இந்த போராட்டம் தொடர்பாக முனிரத்தினம், பிரபாகரன், அருள் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நீதிமன்றத்திற்கு வழக்கு சென்ற போது நீதிபதியிடம் இவர்களை நக்சலைட் என்று சொல்லியிருக்கிறது காவல்துறை தரப்பு, இதை பொய்யான குற்றச்சாட்டு என்பதை உணர்ந்த நீதிபதி  “அப்போது ஏன் இன்னும் ஒரு வழக்கு கூட போடாமல் வைத்திருந்தீர்கள்”, “இது பொய் குற்றச்சாட்டு தானே” என்று காவல்துறையினை கேட்டு நீதிபதி கண்டித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையைத் தொடர்ந்து தற்போது விவசாயிகள் சங்கத்தின் கும்மிடிப்பூண்டி மாவட்டச் செயலாளர் ஜெ.அருளை ரவுடி பட்டியலின் இணைத்து காவல்துறை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

இது தொடர்பாக அருளை தொடர்பு கொண்டு பேசிய போது “மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்ததற்காக என்னை ரவுடிகள் பட்டியலில் ஆறு மாதங்களுக்கு முன்பு இணைத்திருக்கிறார்கள். அடிக்கடி வீட்டிற்கு வந்து குடும்பத்தினரை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் வந்து மிரட்டுவது போன்ற செயலில் ஈடுபடுகிறார்கள். இது உளவியல் ரீதியாக மக்களுக்காக போராடுகிறவர்களை ஒடுக்குவதற்கு எடுக்கிற யுக்தியாகும். என் மீது எதாவது பொய் வழக்கு போடப்படுமேயானால் அது திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கும்” என்கிறார்.

விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளரை இருளர் மக்களுக்கான அடிப்படை தேவைகளுக்காக போராடியதற்காக குற்றவழக்கு சம்பவ பிண்ணனி சார்ந்தவரைப் போல ரவுடி பட்டியலில் இணைத்தது தவறான செயல் என்று சமூக ஆர்வலர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.