Skip to main content

பிரபல ஹோட்டலில் சாப்பிட்ட சிறுமி பலி... ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

aarani restaurant child incident police investigation

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் உள்ளது பிரபலமான 7 ஸ்டார் ஹோட்டல். அசைவ உணவகமான இதில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு சாப்பிடுவர். கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி இரவு பலரும் உணவு சாப்பிட்டுள்ளனர். அப்படி சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளர். அதில் 10 வயது சிறுமி இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆரணியை அடுத்த தந்தரீகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். கூலித் தொழிலாளியான இவர் தனது மனைவி பிரியதர்ஷினி, 14 வயது மகன் சரண், 10 வயது மகள் லோசினி என 4 பேரும் பிரபலமான 7 ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்று பிரியாணியும், தந்தூரி சிக்கனும் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த சிறிது நேரத்திலேயே வாந்தியெடுத்து மயக்கமடைந்துள்ளனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

 

இதேபோல் ஆரணி பையூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் பாஸ்கரன் அவரது மனைவி சந்தியா, 4 வயது குழந்தை பிரணவ், ஆரணியைச் சேர்ந்த ஜாகீர் அவரது மகள் 4 வயது பாத்திமா, யாகூப், சீனுவாசன், விஷ்ணு, திலகவதி, சரவணன், செங்கம் தாலுக்கா காராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பயணிகளான தமிழரசன், மோனிகா, கார்த்திகா, லோகேஷ் போன்றோரும் இந்த ஹோட்டலில் அதேநாளில் அதேநேரத்தில் உணவு சாப்பிட்டுள்ளனர். இவர்களும் வாந்தியெடுத்து, மயக்கமாகியுள்ளனர். இவர்களும் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதில் ஆனந்த், பிரியதர்ஷினி, சரண் 3 பேரை வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். லோசினிக்கு மட்டும் ஆரணியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுமி அக்டோபர் 10ஆம் தேதி அன்று மதியம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டது. இது ஆரணி மற்றும் சுற்றுவட்டார மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து புகார் வந்ததும் ஆரணி கோட்டாச்சியர் கவிதா அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்துள்ளார். ஆரணி டி.எஸ்.பி. கோட்டீஸ்வரன் தலைமையிலான காவல்துறையினர் மருத்துவமனையில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். உணவு பாதுகாப்பு அலுவலர்களும் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

உணவு சாப்பிட்டவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டதும் ஹோட்டல் உரிமையாளர் சம்மந்தப்பட்டவர்களிடம் பேரம் பேசி விவகாரத்தை அமுக்கியுள்ளனர். குழந்தை இறந்ததாலே இந்த விவகாரம் பெரியதானது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.