Skip to main content

பிரபல ஹோட்டலில் சாப்பிட்ட சிறுமி பலி... ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

aarani restaurant child incident police investigation

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் உள்ளது பிரபலமான 7 ஸ்டார் ஹோட்டல். அசைவ உணவகமான இதில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு சாப்பிடுவர். கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி இரவு பலரும் உணவு சாப்பிட்டுள்ளனர். அப்படி சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளர். அதில் 10 வயது சிறுமி இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆரணியை அடுத்த தந்தரீகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். கூலித் தொழிலாளியான இவர் தனது மனைவி பிரியதர்ஷினி, 14 வயது மகன் சரண், 10 வயது மகள் லோசினி என 4 பேரும் பிரபலமான 7 ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்று பிரியாணியும், தந்தூரி சிக்கனும் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த சிறிது நேரத்திலேயே வாந்தியெடுத்து மயக்கமடைந்துள்ளனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

 

இதேபோல் ஆரணி பையூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் பாஸ்கரன் அவரது மனைவி சந்தியா, 4 வயது குழந்தை பிரணவ், ஆரணியைச் சேர்ந்த ஜாகீர் அவரது மகள் 4 வயது பாத்திமா, யாகூப், சீனுவாசன், விஷ்ணு, திலகவதி, சரவணன், செங்கம் தாலுக்கா காராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பயணிகளான தமிழரசன், மோனிகா, கார்த்திகா, லோகேஷ் போன்றோரும் இந்த ஹோட்டலில் அதேநாளில் அதேநேரத்தில் உணவு சாப்பிட்டுள்ளனர். இவர்களும் வாந்தியெடுத்து, மயக்கமாகியுள்ளனர். இவர்களும் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதில் ஆனந்த், பிரியதர்ஷினி, சரண் 3 பேரை வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். லோசினிக்கு மட்டும் ஆரணியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுமி அக்டோபர் 10ஆம் தேதி அன்று மதியம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டது. இது ஆரணி மற்றும் சுற்றுவட்டார மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து புகார் வந்ததும் ஆரணி கோட்டாச்சியர் கவிதா அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்துள்ளார். ஆரணி டி.எஸ்.பி. கோட்டீஸ்வரன் தலைமையிலான காவல்துறையினர் மருத்துவமனையில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். உணவு பாதுகாப்பு அலுவலர்களும் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

உணவு சாப்பிட்டவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டதும் ஹோட்டல் உரிமையாளர் சம்மந்தப்பட்டவர்களிடம் பேரம் பேசி விவகாரத்தை அமுக்கியுள்ளனர். குழந்தை இறந்ததாலே இந்த விவகாரம் பெரியதானது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா? -  மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Radhika | Brain | Youngsters  

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா என்ற கேள்விக்கு பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் பதிலளிக்கிறார். 

முன்பெல்லாம் குழந்தைகள் தவறு செய்யும்பொழுது அடித்து திருத்துவது இயல்பாக இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி இருந்தாலும் வேறு வழிகளில் அவர்களை திருத்தி முறைப்படுத்தலாம். உதாரணத்திற்கு வாரம் முழுக்க வீட்டுப்பாடம் செய்தால் ஸ்டார் கொடுத்து 10 ஸ்டார்ஸ் வாங்கும்போது பிடித்த சினிமாவிற்கு கூட்டி செல்வது, பிடித்த சாக்லேட் வாங்கி கொடுப்பது என்று அவர்களை நெறிப்படுத்தலாம். தவறுகள் செய்யும்போது ஓரிரண்டு நாள் பாக்கெட் மணி கட் செய்வது, மொபைல் போன் தடை செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் யாரையுமே அடிப்பது என்பது தவறு. அது ஒருவகை தண்டனை தான். அது  அவர்களின் சுய நம்பிக்கையை இழக்க செய்யும். 

குழந்தைகளும் ஒருவித கவலை உணர்விலிருந்து வெளி வரவே மொபைல் போன் மீது சார்ந்து இருக்கிறார்கள். ஒரு தவறான விசயம் எந்தளவு அடிமைப்படுத்துகிறதோ அந்த அளவு மொபைல் திரையை பார்ப்பதில் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என்று பல்வேறு மன நோய்களை கொடுக்கிறது. இது கூடவே சரியான உணவு பழக்கமும் தூக்கமுமின்றி வேலை பார்க்கும் இளைஞர்களையும் கூட சேர்த்து பாதிக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோய் தாக்குமளவு இருக்கிறது. இதற்கு தீர்வாக குழந்தைகளிடம் குடும்பமாக சேர்ந்து நேரம் ஒதுக்கி பிடித்த படம் பார்ப்பது, விளையாடுவது போன்று நேரம் செலவழிக்கலாம். ஆனால் இன்றைய தினங்களில் பெற்றோர்களும் வேலை பார்ப்பதால் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிவதில்லை. 

மொபைல், இன்டர்நெட் அடிமை ஆனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் இருக்கிறது. ஆல்கஹால் கூட வாங்காமல் தடுத்து ஒரு வகையில் முழுமையாக நிறுத்த முடியும். இதுவே மொபைல் என்று வரும்போது அவர்களின் தினசரி தேவைக்கும் அது அத்தியாவசியமாக இருப்பதால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். மிக குறைந்த நேரத்தில் மகிழ்ச்சியை கொடுப்பதால் தான் போன் பார்ப்பது என்பது எளிதாக இருக்கிறது. இதுவே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். எனவே இதுபோல பள்ளிகளிலும் போன் பயன்படுத்தாமல் இருக்கவென்று நாட்கள் ஒதுக்கி வேறு விதமான பயிற்சிகளை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். மன நிம்மதிக்காக போன் பார்க்கும் நிலையிலிருந்து மாற வேறு விதமான ஃபன் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடலாம். 

Next Story

ஆரணி காங்கிரஸ் எம்.பி. கடலூர் வேட்பாளராக அறிவிப்பு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Arani Congress MP Cuddalore candidate announcement

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி, மற்றும் நெய்வேலி சட்டமன்ற ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் வருகிற பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆரணி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் மருத்துவர் எம்.கே விஷ்ணுபிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் செயல் தலைவராக உள்ளார். மேலும் இவர் கடந்த 2006 முதல் 2011 வரை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி ஆவார். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் செய்யாறு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புறவழிச்சாலை அனுமதி பெற்று ஓச்சேரி பாலத்தை கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரணி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதால் இவர் கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.