/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rain-coconut-tree_1.jpg)
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கக்கடலில் உருவாகி இருக்கும் மிக்ஜாம் புயல் சென்னைக்கு 230 கி.மீ. தொலைவில் கிழக்கு - தென் கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வடமேற்கு திசையில் இந்த புயல் நகர்ந்து நாளை வட தமிழ்நாடு, ஆந்திர கடற்கரையை நெருங்கும். அதன் பின்னர் தீவிரப் புயலாக மாறி டிசம்பர் 5 ஆம் தேதி நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும். இவ்வாறு கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சில நேரங்களில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புயலின் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, அக்கரை கடற்கரை, புளூ கடற்கரை, நீலாங்கரை கடற்கரை, பாலவாக்கம் கடற்கரை, கொட்டிவாக்கம் கடற்கரை ஆகிய கடற்கரைகளுக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)