Skip to main content

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல சினிமா ரசிகர்களுக்கும் பிடிக்கும்! - 83 விமர்சனம்

Published on 26/12/2021 | Edited on 27/12/2021

 

83 - Not only cricket fans but also cinema fans love it!

 

கிரிக்கெட் உலகில் இன்று இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கான விதை போடப்பட்ட ஆண்டு 1983! அந்த ஆண்டுதான் இந்தியா முதல் முதலில் கிரிக்கெட் உலக கோப்பையை கபில்தேவ் தலைமையில் வென்றது. அந்த வரலாற்று நிகழ்வை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்துள்ளது 83 திரைப்படம்.

 

1983- ஆம் ஆண்டு இந்தியா உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றபோது வழக்கம்போல் லீக் சுற்றுகளோடு வெளியேறிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கி இந்தியா எப்படி உலகக் கோப்பையை கையில் ஏந்தியது என்பதை அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளார் இயக்குனர் கபீர் கான். அந்த கால மைதானங்கள், அப்போது வாழ்ந்த ரசிகர்கள், அன்றைய கலாச்சாரம் என அத்தனை நிகழ்வுகளையும் சரியான கலவையில் கலந்து அதே சமயம் அழுத்தமான திரைக்கதையின் மூலம் ரசிக்கவும் வைதுள்ளார். 80ஸ், 90ஸ், 2கே என அத்தனை கிரிக்கெட் ரசிகர்களும் ரசிக்கும்படியான திரைக்கதையை திறன்பட கையாண்டு பாராட்டு பெற்றுள்ளார். 

 

குறிப்பாக, கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகளை அமைத்த விதமும், களத்துக்கு உள்ளேயும், களத்துக்கு வெளியேயும் நடந்த நிகழ்வுகளை நெகிழ்ச்சி கலந்து ரசிக்கும்படி அமைத்துள்ளதும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதேபோல் அந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதிய ஆட்டம் மட்டும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. கேமராமேன்களின் ஸ்டிரைக் காரணமாக அந்த போட்டியில் கபில்தேவ் அடித்த 175 ரன்கள் என்ற சாதனையை நேரில் பார்த்த ரசிகர்களை தவிர்த்து இதுவரை யாரும் பார்த்ததில்லை. அந்த ஏக்கத்தை இந்த படம் தனித்துள்ளது. அதேபோல் கிரிக்கெட் தவிர்த்து அந்த காலகட்டத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளும், சச்சின் டெண்டுல்கர் சம்பந்தப்பட்ட காட்சியும் படத்துடன் ஒன்றி ரசிக்கும்படி அமைந்துள்ளது.

83 - Not only cricket fans but also cinema fans love it!

படத்தின் இன்னொரு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது கதாபாத்திர தேர்வு. அன்று விளையாடிய 11 பேருடனும் அப்படியே நாம் ரிலேட் செய்து கொள்ளும்படியான நடிகர்களை தேர்வு செய்து, அவர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளது நாஸ்டால்ஜிக் நினைவுகளை தூண்டியுள்ளது. கபில்தேவ் ஆக நடித்திருக்கும் ரன்வீர்சிங் படம் முழுவதும் நம் கண்களுக்கு வெறும் கபில்தேவ் ஆக மட்டுமே தெரிகிறார். அந்த அளவுக்கு கதாபாத்திரத்துடன் ஒன்றி நடிப்பிலும் சரி, உடல் மொழியிலும் சரி அமர்க்களப்படுத்தி யுள்ளார். இவர் அந்த முன் பற்களைக் காட்டிக் கொண்டு பேசும் காட்சிகள் எல்லாம் அப்படியே கபில்தேவ் கண் முன் நிற்கிறார்.

 

தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் ஜீவா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யும்படி சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். இவர் கண்ணை சிமிட்டி கொண்டு பேசும் காட்சிகளில் அப்படியே ஸ்ரீகாந்தை கண்முன் நிறுத்தி உள்ளார். அதேபோல் களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஸ்ரீகாந்த் உடல் மொழியை பக்காவாக பிடித்து சிறப்பாக நடித்துள்ளார். 

 

கபில் தேவின் மனைவியாக நடித்திருக்கும் தீபிகா படுகோன் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதியும்படி நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் படத்திற்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக நடித்திருக்கும் பங்கஜ் த்ரிபாதி நிறைவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி சென்றுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அன்று இருந்த பொருளாதார நிலைமையை இவரின் கதாப்பாத்திரம் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. 

 

மற்றபடி அணியில் விளையாடிய சுனில் கவாஸ்கர், ரவிசாஸ்திரி, பல்விந்தர் சிங் சாந்து, மதன்லால், மொகிந்தர் அமர்நாத், யஷ் பால் ஷர்மா, ரோஜர் பின்னி, சந்தீப் பாட்டீல், சயத் கிர்மானி கதாபாத்திரங்களுக்கு ஆளுக்கு ஒரு காட்சி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்களும் அந்த கதாபாத்திரமாகவே மாறி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

83 - Not only cricket fans but also cinema fans love it!

இந்தப் படத்தின் இன்னொரு மிகப்பெரிய பலம் படத்தின் மேக்கிங். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து படத்தை பிரம்மாண்டமாக காட்டியுள்ளது. குறிப்பாக கிரிக்கெட் மைதான சம்பந்தப்பட்ட காட்சிகள், வீரர்களுக்குள் நடந்த உணர்ச்சிபூர்வமான காட்சிகள் ஆகியவைகள் சிறப்பாக வர ஒளிப்பதிவும், பின்னணி இசையும் சரியான பங்களிப்பை வழங்கியுள்ளது. 

 

கிரிக்கெட் போட்டிகளை படமாக்கிய விதம், வீரர்களுக்குள் நடந்த நெகிழ்ச்சியான தருணங்கள் என படத்தில் ரசிப்பதற்கான பல விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. அதனாலேயே 83 திரைப்படம் தவிர்க்கமுடியாத திரைப்படமாக மாறியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!