Skip to main content

விவசாயியிடம் நூதன முறையில் 7 லட்சம் ரூபாய் சுருட்டல்; சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

7 lakhs of rupees from the farmer in a fraudulent manner; Cyber ​​crime police investigation!

 

தர்மபுரி அருகே, பரிசுத்தொகை விழுந்துள்ளதாகக் கூறி, விவசாயியிடம் நூதன முறையில் மர்ம கும்பல் 7 லட்சம் ரூபாய் சுருட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டையைச் சேர்ந்தவர் அந்தோணி. இவருடைய மகன் பாபு (வயது 32). இவர் விவசாயி. இவருக்கு 12.80 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. 

 

இதை நம்பிய பாபு, அந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். எதிர் முனையில் பேசிய மர்ம நபர், பரிசுத்தொகையைப் பெற முதலில் 6.99 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும். அதன்பிறகு பரிசுத்தொகை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று கூறியுள்ளார். 

 

வெறும் 7 லட்சம் ரூபாய் செலுத்தினாலே கிட்டத்தட்ட 13 லட்சம் ரூபாய் வரை பரிசுத்தொகை கிடைக்கிறதே என்ற ஆசையில் அவரும் மர்ம நபர் சொன்ன வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தினார். ஆனால், பல நாள்கள் ஆகியும் பாபுவின் வங்கிக் கணக்கில் பரிசுத்தொகை வரவு வைக்கப்படவில்லை. குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அந்த எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. 

 

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாபு, இதுகுறித்து தர்மபுரி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் மாற்றம்; தொண்டர்கள் கொண்டாட்டம்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Dharmapuri pmk candidate change Celebration of volunteers

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நேற்று (21.03.2024) வெளியானது. அதில் பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - அரசாங்கம், விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ் அறிவிக்கப்பட்டனர். காஞ்சிபுரத்திற்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தருமபுரி தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் அரசாங்கம் மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக அக்கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவியும், பசுமை தாயகம் அறக்கட்டளையின் தலைவருமான சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தருமபுரியில் பா.ம.க.வினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

Next Story

தொடரும் சிறார் பாலியல் கொலை சம்பவங்கள்; தர்மபுரியில் மீண்டும் அதிர்ச்சி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Continued incidents of againt child ; Shock again in Dharmapuri

அண்மையில் புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி கஞ்சா போதை இளைஞர் மற்றும் முதியவர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து இதேபோன்ற சிறார் பாலியல் கொலை சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது மிட்டா ரெட்டி ஹள்ளி கிராமம். அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்த ஐந்தாம் வகுப்பு சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளார். பங்குனி உத்திரத்திற்காக பழனி மலைக்கு செல்வதற்காக அந்த சிறுவன் மாலை அணிந்து இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சிறுவன் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியது. உறவினர்களும் பெற்றோர்களும் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.

அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவன் அந்தச் சிறுவனை அழைத்துச் சென்றதை சிலர் பார்த்ததாக கூறியுள்ளனர். அன்று மாலை வரை சிறுவன் கிடைக்காததால் சிறுவனின் பெற்றோர் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சிறுவனை அழைத்துச் சென்றதாக கூறப்பட்ட பிளஸ் 2 மாணவனை அழைத்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் பிளஸ் டூ மாணவன் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், இதனை வெளியே சொல்லி விடுவான் என்ற பயத்தில் கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூர சம்பவமும் வெளியே வந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த பிளஸ் டூ மாணவனை அழைத்துச் சென்ற தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சிறுவனின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.