Skip to main content

55 பவுன் நகை கொள்ளை... நூதன முறையில் மிரட்டியதால் வழி தெரியாமல் தவித்த குடும்பத்தினர்!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

55 pound jewelery robbery ... Family stranded due to intimidation in a modern way
                                                               மாதிரி படம்

 

விழுப்புரம் மாவட்டத்தில் கொள்ளையர் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. திண்டிவனம் அருகிலுள்ள மயிலம் அருகில் உள்ளது வெளியனூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வேணு. இவர் தன் வீட்டிலேயே சொந்தமாக மளிகைக் கடை வைத்து நடத்திவருகிறார். நேற்று முன்தினம் (25.07.2021) இரவு கடையை மூடிவிட்டு அவரும் அவரது மனைவி முத்துலட்சுமி, மகள் விஜயகுமாரி ஆகிய மூவரும் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் ஐந்து முகமூடி கொள்ளையர்கள், அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளே நுழைந்தனர்.

 

கொள்ளையர்களைக் கண்டதும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூவரும் பதறி எழுந்தனர். அப்போது கொள்ளையர்கள் ஐந்து பேரும் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்துக்காட்டி, ‘கத்தி சத்தம் போட்டால் உங்களைக் கொலை செய்துவிடுவோம்’ என மிரட்டியுள்ளனர். அதோடு அவர்கள் மூவரின் கை, கால்களையும் கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்துவிட்டு பீரோவில் இருந்த 49 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். அவர்கள் வீட்டைவிட்டுச் செல்லும்போது முத்துலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தாலி, கம்மல் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டனர்.

 

பின்னர் அவர்கள், “நாங்கள் வீட்டின் வெளியே ஒருமணி நேரம் காத்திருப்போம். யாராவது கத்திக் கூச்சல் போட்டால், மீண்டும் வீட்டுக்குள் புகுந்து உங்கள் மூவரையும் கொலை செய்துவிடுவோம்” என்று மிரட்டியுள்ளனர். அவர்கள் மூவரையும் வீட்டுக்குள்ளேயே கட்டிப் போட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டனர். இதனால் பயந்துபோன அந்த மூவரும் ஒருமணி நேரம் கழித்து கத்தி சத்தம் போட்டுள்ளனர். இவர்களது கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம்  வீட்டுக்காரர்கள் திரண்டனர். உடனடியாக மயிலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதர், திண்டிவனம் டி.எஸ்.பி கணேசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

 

மேலும், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் ஆகியவை வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றுவிட்டது, யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட 55 நகையின் மதிப்பு 22 லட்சம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மளிகை வியாபாரி வேணுவின் மகள் விஜயகுமாரிக்கு அடுத்த மாதம் திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துவைத்திருந்தனர். அதற்காக சேர்த்துவைத்திருந்த நகைகளைத்தான் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனால் அந்தக் குடும்பத்தினரும் அவர்களது உறவினர்களும் பெரும் சோகத்தில் உள்ளனர். இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த மயிலம் போலீசார் மாவட்டக் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி தனிப்படை அமைத்து, ஐந்து முகமூடி கொள்ளையர்களைத் தீவிரமாக தேடிவருகின்றனர். இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.