
வேலை வாங்கித் தருவதாகக் கூறி 47 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரையை சேர்ந்த ஸ்ரீபுகழ் இந்திரா- ரேணுகா என்ற தம்பதியினர் தணிக்கை நிறுவனம் நடத்தி வரும் பஞ்சவர்ணம் என்பவரை தொடர்புகொண்டு திமுக மற்றும் அதிமுகவின் முக்கிய தலைவர்களுடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், வேண்டுமென்றால் உங்களுடைய மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறி உள்ளனர். அவர்கள் கூறியதை நம்பிய பஞ்சவர்ணம் 47 லட்சத்து 26 ஆயிரம் ரூபாயை பல தவணைகளாக அரசு வேலை வாங்கித் தருவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த தம்பதியிடம் கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்து அதிக நாட்கள் ஆகியும் தம்பதியினர் இறுதிவரை வேலையும் வாங்கித் தராமல், கொடுத்த பணத்தையும் திரும்பத் தராமல் இருந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை பஞ்சவர்ணம் முறையிட்ட நிலையிலும் தம்பதியினர் பணத்தை தர முடியாது என கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் போலீசாரிடம் பஞ்சவர்ணம் புகார் கொடுத்த நிலையில், ஸ்ரீ புகழ் இந்திரா-ரேணுகா தம்பதியினரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.