
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மெட்டுகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(50) . இவர் அந்த பகுதியில் மளிகை கடை மற்று உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராஜாவின் இரண்டாவது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் படு தீவிரமாக நடந்து வந்துள்ளது. அண்மையில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், திருமணத்திற்காக உடைகள் வாங்க குடும்பத்துடன் ஜவுளிக் கடைக்குச் சென்றுள்ளார்.
பின்னர் திருமணத்திற்குத் தேவையான ஆடைகளை வாங்கிவிட்டுத் திரும்பிய ராஜா, வீட்டைக் கதவு கேஸ் கட்டிங் மூலம் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பதறிப்போய் உடனடியாக ராஜா உள்ளேச் சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 40 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக காட்பாடி காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கைரேகை நிபுணர் குழுவுடன் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து திருட்டில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கஷ்டப்பட்டு மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகைகள் திருடு போயுள்ளதால் தந்தை உள்ளிட்ட அந்த குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.