![4 vehicles collided one after the other](http://image.nakkheeran.in/cdn/farfuture/oEHgs4G1yDb2KxD_LV8keGxa7DilQGJ5aMqAbmvi7KM/1701932288/sites/default/files/inline-images/a3587.jpg)
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நான்கு வாகனங்கள் தொடர்ச்சியாக மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அத்திமனம் என்ற பகுதியில் சாலையில் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பெட்ரோல் ஏற்றி வந்த ஒரு லாரியானது வேகமாக வந்தது. அந்த பகுதியில் திடீரென சாலையை மாடுகள் வேகமாக கடந்தது. இதனால் லாரி உடனே பிரேக் போடப்பட்டு நிறுத்தப்பட்டது. அப்போது வேகமாக பின்புறம் வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியது. நான்கு வாகனங்கள் தொடர்ச்சியாக மோதிக் கொண்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டது.
இதில் விபத்தில் சிக்கிய கார் ஒன்று முழுமையாக நொறுங்கியது. காரை தொடர்ந்து வந்த இரண்டு அரசு பேருந்துகளும் மோதியது. கார் நொறுங்கி முழுமையாக சேதம் அடைந்த போதிலும், எந்த ஒரு உயிர்ச்சேதமும் இன்றி காரில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 5 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த திடீர் விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் அறிந்து அங்கு வந்த மதுராந்தகம் போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.