Skip to main content

பொன்மலை ரயில்வே பணி மனையில் 3.5 டன் எடையுள்ள மோட்டார் திருட்டு!

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

3.5 ton motor theft at Ponmalai railway work site

 

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், இந்திய ரயில்வேக்கு தேவையான ரயில் பெட்டிகள், ரயில் இன்ஜீன்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் தற்போது 5 ஆயிரத்திற்கு அதிகமான வெளிமாநில மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 

இந்த பணிமனையில் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. அதில் எலக்ட்ரிக்கல், இஞ்சின் வடிவமைப்பு, ரயில் கட்டுமான பிரிவு  என்று பல பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்கள் இல்லாமல் மற்ற பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களும் இங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பணிமனைக்குள் இருந்து ஸ்க்ராப் என்று சொல்லக்கூடிய பழைய இரும்பு பொருட்கள் அனைத்தும் ஏலத்தில் எடுத்துச் செல்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் லாரி வந்துள்ளது. அந்த லாரியில் பணிமனையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த ஒப்பந்த பணியாளர்களைக் கொண்டு பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது, இஞ்சினில் உள்ள மின் மோட்டாரையும் சேர்த்து ஒப்பந்த ஊழியர்கள் ஏற்றியுள்ளனர்.

 

அதன்பின் ஊழியர்கள் மின் மோட்டாரை காணவில்லை என்று கூறி தேட ஆரம்பித்தபோது, பணிமனைக்குள் வந்துவிட்டுச் சென்ற லாரிகள் எது என்று அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டபோது, சிசிடிவி பதிவுகளைக் கொண்டு அந்த லாரியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின் அந்த லாரி எது என்று கண்டுபிடித்து அந்த லாரியை ஓட்டி வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியதில் அந்த லாரி கோவையைச் சேர்ந்தது என்றும், அதனை ஓட்டி வந்தவர்கள் கோபால்(30), மணிகண்டன்(29) ஆகிய இருவரும் என்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியை கைப்பற்றி சோதனை செய்ததில் அவர்கள் 3.5 டன் எடையுள்ள 2 மோட்டார்களைத் திருடிச் சென்றுள்ளனர். ஒரு மோட்டாரின் விலை 25 லட்சம் ரூபாய் எனவும், 2 மோட்டார்கள் 50 லட்சம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் அவர்களைக் கைது செய்த ரயில்வே காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் ஒருவர் தேடப்பட்டு வருகிறார். இந்த வழக்கில் மின் மோட்டாரை திருடிச் செல்லும் அளவிற்கு அஜாக்கிரதையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரண், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், போலீஸ்காரர் சதீஷ்குமார் உள்ளிட்ட 3 பேரையும் இரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஈஸ்வர ராவ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்கத் தயாரான மக்கள்; ரயில்வேயின் திடீர் அறிவிப்பால் அவதி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

இதற்கிடையில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக அஸ்ஸாமுக்கு மற்றும் அங்கிருந்து செல்லும் பல ரயில்களை ரத்துசெய்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அஸ்ஸாமின் 5 தொகுதிகளில் இன்று (26-04-24) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், நேற்று (25-04-24) லும்டிங் பிரிவில் உள்ள ஜதிங்கா லம்பூர் மற்றும் நியூ ஹரங்காஜாவோ நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்ட சம்பவத்தின் காரணமாக பல ரயில்களின் நேரத்தை மாற்றியமைத்து ரத்து செய்ததாக வடகிழக்கு எல்லை ரயில்வே அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாக பிற மாநிலங்களுக்கு சென்று வாழும் அஸ்ஸாமிய மக்கள் இன்று ஓட்டு போடுவதற்காக தங்கள் சொந்த மாநிலமான அஸ்ஸாம் நோக்கி வர வார இறுதி விடுமுறையில் கிளம்ப இருந்த நேரத்தில் நேற்று (25-04-24) மாலை திடீரென்று அஸ்ஸாம் செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரயில்வேயின் இந்த திடீர் அறிவிப்பால், பொதுமக்கள் பலரும் அவதியடைந்து வருகின்றனர். இதுபோன்ற முக்கியமான நாளில் வாக்காளர்கள், வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த அறிவிப்புக்கு பின்னால் பா.ஜ.க.வின் சதி இருப்பதாகவும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.