கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் பகுதியில் வசித்து வரும் கார்த்திகேயன்(57) என்பவர் சாக்கு வியாபாரம் செய்து வருகிறார். அப்பகுதியில் நவீன அரிசி ஆலைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு, நெல் கொள்முதல் நிலையம் போன்றவை செயல்பட்டு வருவதால் 20 வருடங்களுக்கும் மேலாக விவசாயிகளுக்குத் தகுந்தவாறு வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி கார்த்திகேயன், அவரது மனைவி ஆண்டாள், மகன்கள் ரமேஷ் விஷ்ணு ஆகியோருடன் திருப்பதி கோவிலுக்குச் சென்றிருந்தார். அங்கு வெங்கடாஜலபதியை வழிபட்டு விட்டு நேற்று முன்தின இரவு கார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் கார்த்திகேயன் வியாபாரத்திற்காக வைத்திருந்த சுமார் மூன்றரை லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும், அதே பீரோவில் வேறு அறையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம், 2 பவுன் நகை மற்றும் புடவைக்கு அடியில் வைத்திருந்த 6 பவுன் நகைகளை கொள்ளையர்கள் பார்க்காத நிலையில், அவற்றை அப்படியே விட்டு விட்டுச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் போலீசார் கார்த்திகேயன் வீட்டிற்கு விரைந்து வந்து சோதனை நடத்தி விசாரணை செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மூன்றரை லட்சம் பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம கொள்ளையர்களைத் தீவிரமாக தேடி வருகிறார்கள். இப்பகுதியில் அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நடப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.