தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும் தற்போது அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் வழக்கம்போல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 21 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 21 மீனவர்களும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்த முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விசாரணைக்குப் பிறகு மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு மீனவர்களின் 4 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 21 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இலங்கையின் அதிபராக அநுர குமார திஸ்நாய்க பதவியேற்ற பின்பும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்வதாகவும் தமிழக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.