![21 more judges to hear cases directly in Chennai High Court! - Judicial Registrar Announcement!](http://image.nakkheeran.in/cdn/farfuture/zBQzBn6d8XJGsxYSruu2WzWUcdSHgt7pZnrtlol1zY4/1601490442/sites/default/files/inline-images/bnmnmnm_85.jpg)
சென்னை உயர் நீதிமன்றத்தில், மேலும் 21 நீதிபதிகள் நேரடியாக வழக்குகளை விசாரிக்க உள்ளனர். கரோனா தொற்று பரவலைத் தடுக்க, உயர் நீதிமன்றத்தில் 150 நாட்களுக்கு மேல் வழக்குகள் காணொலிக் காட்சி மூலம் விசாரிக்கப்பட்டு வந்தன. செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் இரு நீதிபதிகள் அடங்கிய ஆறு அமர்வுகள் மட்டும் நேரடி விசாரணை நடத்தின. வழக்கறிஞர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழக்குகள், காணொலிக் காட்சி மூலமும், நேரடியாகவும் விசாரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், அக்டோபர் 5-ஆம் தேதி முதல், மேலும் 21 நீதிபதிகள் நேரடியாக வழக்குகளை விசாரிக்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது. அதில், நீதிபதிகள் ரவிசந்திரபாபு, பிரகாஷ், புஷ்பா சத்யநாராயணா, பாரதிதாசன், கிருஷ்ணகுமார், பார்த்திபன், ரமேஷ், ரவீந்திரன், வேல்முருகன், ஜெயச்சந்திரன், கார்த்திகேயன், டீக்கா ராமன், சதீஷ்குமார், பவானி சுப்பராயன், ஜெகதீஷ்சந்திரா, தண்டபாணி, ராஜமாணிக்கம், பொங்கியப்பன், ஹேமலதா, சரவணன், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் நீதிமன்ற விசாரணை அறையில் நேரடியாக வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.
நீதிமன்ற அறைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், காலையில் ரிட் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகளும், பிற்பகல் மேல் முறையீட்டு வழக்குகளும், உரிமையியல் வழக்குகளும் விசாரிக்கப்படவுள்ளன. மனுதாரர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த வழக்குகள் நேரடியாகவோ, காணொலிக் காட்சி மூலமாகவோ விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
![Ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/24IIj_WWURXA9FUDRz1Ui6oztOGg8IfO7fdyY44u2y8/1598702903/sites/default/files/inline-images/01_19.png)
மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்ட அறிவிப்பில், கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்புக்காக உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.