Skip to main content

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற 20 நபர்கள்!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

20 people who tried to set fire on them before the District Collector's Office

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா சிறுவள்ளிக் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி, அஞ்சலை, காவேரி, கன்னிகா, கௌசல்யா, தெய்வானை, மீனாட்சி, மலர் உட்பட இவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் நேற்று (26.07.2021) காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். திடீரென அவர்கள் தாங்கள் தயாராகக் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தங்கள் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு, தீ வைத்துகொள்ள முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.

 

அப்போது அவர்கள், “நாங்கள் சிறுவள்ளிக் குப்பம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 25 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்துவருகிறோம். கடந்த 2018ஆம் ஆண்டு குடியிருந்துவரும் இடத்திற்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தோம். இதையடுத்து எங்களுக்குப் பட்டா வழங்குவதற்காக அந்த இடத்தை மனைப் பிரிவுகளாக அளவு செய்து வரைபடம் தயாரித்தனர். இந்த நிலையில், நாங்கள் குடியிருக்கும் வீடுகளை இடித்து காலி செய்துவிடுவதாகச் சொல்லி அரசியல் கட்சியினரின் தூண்டுதலின்பேரில் அரசு அலுவலர்கள் எங்களைத் தொடர்ந்து மிரட்டிவருகின்றனர்.

 

எனவே நாங்கள் பல ஆண்டுகளாக வசித்துவரும் அந்த இடத்திற்கு அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில் எங்களிடம் உள்ள குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை அரசிடமே ஒப்படைத்துவிட்டு, நாங்கள் குடும்பத்தோடு அனைவரும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம். எனவே, எங்கள் குடியிருப்புகளை அகற்றும் முடிவைக் கைவிட்டு, எங்களுக்கு பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இந்த தகவலைப் போலீசார் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகக் கூறினார்கள்.

 

மேலும், கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற தவறான செயலில் ஈடுபடக் கூடாது என்று அவர்களைப் போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நபர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.