![2 youth from Bihar stole 3 jewels by demanding to polish gold jewels](http://image.nakkheeran.in/cdn/farfuture/7GM7uIMKjAWLPDMQqftBlZhhgS3Xg7BvLUvzzp2EBzM/1716814639/sites/default/files/inline-images/Untitled-9_43.jpg)
திருச்சி எடமலைப்பட்டி புதூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருபாகரன். இவரது மனைவி மீனாட்சி (42). சம்பவத்தன்று வீட்டில் மீனாட்சி மட்டும் தனியாக இருந்தபோது அவரது வீட்டுக்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் வந்தனர். வீட்டுக்குள் இருந்த மீனாட்சியிடம் தங்க வெள்ளி, நகைகளை பாலிஷ் போட்டு தருகிறோம். உங்களிடம் இருக்கிறதா என்று கேட்டுள்ளனர். அதற்கு மீனாட்சி அதெல்லாம் இல்லை. நீங்கள் செல்லுங்கள். எனக்கு பல வேலை இருக்கிறது என்று கூறியுள்ளார்.
அதற்கு அந்த இரண்டு பீகார் வாலிபர்களும் குடிக்க தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். அப்பொழுது மீனாட்சி சமையல் அறைக்குச் சென்று குடிக்க செம்பில் தண்ணீரை எடுத்துக்கொண்டு கொடுக்க வந்தார். உடனே அந்த இரண்டு வாலிபர்களும் மாயமாகி விட்டார்கள்.
மேலும் வீட்டின் மேஜையில் இருந்த மூன்று பவுன் நகை காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இந்த இரண்டு வாலிபர்கள்தான் நகையைத் திருடி சென்று உள்ளார்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து மீனாட்சி எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையைத் திருடியதாக கூறப்படும் இரண்டு பீகார் வாலிபர்களை தேடி வருகின்றனர்.