Skip to main content

16 குழந்தைகள் இலக்கு.. 12 வது குழந்தையுடன் மாயமான கர்ப்பிணியை தேடும் சுகாதார துறை

Published on 12/08/2018 | Edited on 12/08/2018
aa

    

நாம் ஒருவர் நமக்கு ஒருவர் என்று அரசாங்கம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து வந்தாலும் ஆண் ஒன்று பெண் ஒன்று என்ற இலக்கில் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தை செல்வங்களை பெற்றுக் கொள்வது வழக்கமாகிவிட்டது. 


    இந்த காலகட்டத்தில் கர்ப்பிணி என்பதை அறிந்தவுடனேயே மருத்துவமனைக்கு சென்று சத்து, மாத்திரை, மருந்து என்று மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் அத்தனையும் வாங்கிச் சாப்பிட்டாலும் கடைசியில் பிரசவம் அறுவை சிகிச்சை தான் என்ற நிலை உள்ளது. 
    ஆனால் ஒரு தம்பதிக்கு இதுவரை 11 குழந்தைகளும் சுயப்பிரசவமாக பிறந்த நிலையில் 12 வது குழந்தைக்காக மருத்துவ பரிசோதனை செய்ய சென்ற இடத்தில் மருத்துவர்கள் மருத்துவமனையில் தான் பிரசவம் பார்க்க வேண்டும் இதற்கு மேல் குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று அறிவுரை சொன்னதால் 52 வயது கர்ப்பிணியும் அவரது கணவரும் தலைமறைவாகிவிட்டனர். ஊர் ஊராக தேடிய சுகாதார துறையினர் மாயமான கர்ப்பிணியை கண்டுபிடித்துத் தரக்கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 


    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா வேதியங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். அவரது மனைவி ஆராயி (52). இவர்களைத் தான் போலிசாரும் சுகாதார துறையிரும் தேடி வருகிறார்கள். ஆனந்தன் -  ஆராயி தம்பதிக்கு இதுவரை விஜயா, கலா, போதும்பொண்ணு, ஹரிகரன், மாதவன், காளிதாஸ், கரிகாலன், முனீஸ்ரன் உள்பட 9 குழந்தைகள் உள்ளனர். 2 குழந்தைகள் இறந்துவிட்டனர். 12 வது குழந்தையாக தற்போது கர்ப்பமாக உள்ளார். இதில் மாதவன் உள்ளிட்ட 4 பேருக்கு திருமணம் நடந்துவிட்டது. இத்தனைக்கு 10 அடி நீளம், 6 அடி அகலத்தில் உள்ள சின்னஞ்சிறிய பாதி மண் சுவர் வைக்கப்பட்ட கூரை வீடு. இதில் தான் அத்தனைபேரும் வசிக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த மாதவனும் அந்த வீட்டில் தான் வசிக்கிறார். அவர்களின் தொழில் பறவைகள் வேட்டையாடுவது, பன்றி வளர்ப்பது தான். இத்தனை குழந்தைகளும் மருத்துவமனை துணையின்றி சுயபிரசவமாக தான் நடந்துள்ளது. இந்த நிலையில் தான் 12 வதாக வயிற்றில் உள்ள குழந்தைக்காக கடந்த 4 ந் தேதி சிங்கவனம் கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு சென்ற ஆராயிக்கு ரத்தம் குறைவாக உள்ளது, தொடர்ந்து மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். பிரசவம் மருத்துவமனையில் தான் பார்க்க வேண்டும் அதனால் தங்க வேண்டும் என்று சொன்னதால் சில நாட்கள் அங்கு தங்கி இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி வீட்டுக்கும் செல்லாமல் எங்கோ மாயமாகிவிட்டனர். 12 வது குழந்தையுடன் குடும்பக்கட்டுப்பாடு செய்ய வேண்டும் பிரசவம் பிரச்சனையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக சுகாதார நிலைய மருத்துவர் குழு அவரை பல நாட்கள் இரவு பகல் வீட்டில் தங்கி இருந்தும் கிடைக்கவில்லை. அதனால் தான் நாகுடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.


     இது குறித்து ஆராயியின் அம்மா.. எனக்கு 5 புள்ளைங்க தான் என் மகளுக்கு தான் 10 க்கும் மேல. இப்ப அவளுக்கு பிரசவம் நடந்த ஆபத்துன்னு ஆஸ்பத்திரியில சொன்னாகலாம். அன்னையில இருந்து எங்கே போனாங்கன்னு தெரியல என்றார்.
    அவரது உறவினர்களோ.. ஆனந்தன் – ஆராயி தம்பதிக்கு 16 புள்ளை பெத்துக்க ஆசை. அதில் 12 வது குழந்தை தான் வயிற்றில் இருக்கிறது. 11 வது குழந்தைக்கு ஆஸ்பத்திரிக்கு பிரசவம் பார்க்க போனாங்க. அங்கே ரொம்ப சிக்கலா இருக்கு ஆபரேசன் செய்யனும் என்று சொன்னதால அங்கிருந்து வீட்டுக்கு வந்து சுயபிரசவம் நடந்துச்சு. 11 குழந்தைகளும் சுயபிரசவம் தான். அதில் 2 குழந்தை இறந்துடுச்சு. 4 பேருக்கு மேல கல்யாணம் நடந்துருச்சு. 


    இப்ப 12 வது குழந்தைக்காக சும்மா செக்கப் போனாங்களாம். டாக்டர் உடம்பு தாங்காது. ரத்தம் பத்தாதுன்னு சொல்லி தங்க சொல்லி இருக்கிறார். அதை கேட்டதும் ஆபரேசன் செஞ்சுடுவாங்கன்னு நினைச்சு தப்பி வந்து ஊரைவிட்டே போயிட்டாங்க. இனி குழந்தை பிறந்த பிறகு தான் வரப் போறாங்க. 18 ந் தேதி குழந்தை பிறக்கும்னு டாக்டர் சொல்லி இருக்கார். தினமும் போலிசும், ஆஸ்பத்திரிகாரங்களும் வந்து தேடுறாங்க. ஒரு நர்சு இரவுல தங்கி இருந்து தேடினாங்க கிடைக்கல என்றனர்.


    மேலும்.. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தனுக்கு கருத்தடை செய்ய மருத்துவமனை வரை அழைத்துச் சென்ற நிலையில் அங்கிருந்து தப்பி வந்துள்ளார். இத்தனை குழந்தைகள் பிறக்கும் வரை வேடிக்கை பார்த்த சுகாதாரதுறை தற்போது சுயப்பிரசவம் பற்றிய பிரச்சனை எழுந்த்தும் ஆராயியை தேடுகிறது. இந்த முறையும் சுயமா குழந்தை பெத்துக்கும் தான் வருவாங்க. ஆனால் 16 குழந்தை பிறக்கும் வரை கருத்தடை செய்ய ஒத்துக்கமாட்டாங்க என்றனர்.


    சுயபிரசவம் சாத்தியமா? என்றால் கிராமங்களில் இயற்கை உணவுகளை உண்ணும் ஆராயி போன்ற பெண்களுக்கு சாத்தியமாகவே உள்ளது. 
                
 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறப்பு சான்றிதழில் குழந்தை பெயர் பதிய 5 ஆண்டுகள் அவகாசம்!

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

BIRTH CERTIFICATE CHILDREN NAME REGISTER TN GOVT

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் அளித்தது தமிழக அரசு. 

 

01/01/2000- க்கு முன் பிறந்த குழந்தைகளின் பெயரை பதிவு செய்ய தவறியவர்களுக்கு மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படுகிறது. 31/12/2019-ல் முடிந்த நிலையில் இந்திய தலைமை பதிவாளர் மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் வழங்கியுள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்கள், உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் நலன் கருதி அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. பிறப்பு பதிவு செய்யப்பட்டதிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தைப் பெயரை கட்டணமின்றி பதிவு செய்துக் கொள்ளலாம். ஓராண்டுக்கு பின் குழந்தையின் பெயரை 15 ஆண்டுகளுக்குள் உரிய தாமத கட்டணம் செலுத்திப் பதிவு செய்திடலாம். குழந்தையின் பெயரை பதிவு செய்ய வி.ஏ.ஓ., பேரூராட்சி செயல் அலுவலர், துப்புரவு- சுகாதார ஆய்வாளர்களை அணுகலாம். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

 

 

Next Story

ராகுல் காந்தி குறித்து நர்ஸ் அதிரடி அறிவிப்பு!

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

டெல்லியைச் சேர்ந்த ஜெய் பகவான் கோயல், சந்தர் பிரகாஷ் தியாகி ஆகியோர் ராகுல் காந்தியின் இங்கிலாந்து குடியுரிமையை காரணம் காட்டி அவரை தேர்தலில் இருந்து போட்டியிட தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.இது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு அருகே சுல்தான் பத்ரியில் கல்லூர் பகுதியைச்  சேர்ந்த ராஜம்மா வவாதில் என்ற 72 வயது ஓய்வு பெற்ற செவிலியர் ராகுல் காந்தி இந்தியாவில் பிறந்தார் என்பதற்கு தான் சாட்சி என்று தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ராஜம்மா பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

 

nurse



ராகுல் காந்தி கடந்த 1970-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி டெல்லியில் உள்ள ஹோலி ஃபேமலி ஹாஸ்பிடலில் பிறந்தார். நான் அப்போது ராகுல் காந்தி பிறந்த மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணியில் இருந்தேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏனென்றால், சோனியா காந்திக்கு ஆண் குழந்தை, அதாவது ராகுல் காந்தி பிறந்தவுடன் அந்த குழந்தையை கையில் ஏந்திய செவிலியர்களில் நானும் ஒருவர். அப்போது அவர் மிகவும் அழகாக இருந்தார். ராகுல் காந்தி இந்தியாவில்தான் பிறந்தார் என்பதற்கு நான்தான் சாட்சி. இந்திரா காந்தியின் பேரனை நான் இங்கு பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 49 வயதாகும் 'கியூட்பேபி' காங்கிரஸ் தலைவராகவும், வயநாட்டில் போட்டியிடுவதையும் நினைத்து மகிழ்கிறேன்.

சோனியா காந்தி பிரசவத்துக்கு அழைத்துச் சென்றபோது, ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி ஆகியோர் மருத்துவமனையின் பிரசவ அறைக்கு வெளியே அமர்ந்திருந்தனர். இந்த கதையை நான் என் குடும்பத்தாரிடம் பல முறை கூறி இருக்கிறேன். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகார் எழுப்பியுள்ளது வருத்தமளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை ராகுல் காந்தியின் குடியுரிமை அடையாளத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது, அவரின் குடியுரிமை குறித்த சுப்பிரமணியன் சுவாமியின் புகார் ஆதாரமற்றது.

ராகுல் காந்தி டெல்லியில் பிறந்தார் என்பதற்கான அனைத்து சான்றுகளும் மருத்துவமனையில் இருக்கும். ராகுல் காந்தி அடுத்த முறை வயநாட்டுக்கு வரும்போது நான் அவரைச் சந்திக்க காத்திருக்கிறேன். இவ்வாறு ராஜம்மா தெரிவித்தார்.