Skip to main content

100 ஏக்கர் நிலம் எதற்கு? அமைச்சர் சொல்ல முடியுமா? ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

கோபிச்செட்டிப்பாளையத்தில் ஈஸ்வரன் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கி தந்தால் ஈரோடு மாவட்டத்தை பிரித்து கோபியை தனி மாவட்டமாக்குவதற்கு நான் கோரிக்கை வைக்கிறேன் என்று அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டியளித்திருக்கிறார். இதிலிருந்து கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களை பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கையே அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வைக்காமல் இருப்பது தெரிய வருகிறது. 


 

கோவை, ஈரோடு, சேலம் போன்ற பெரிய மாவட்டங்களை பிரிப்பதன் மூலமாக வளர்ச்சித்திட்டங்களை வேகப்படுத்த முடியும். அந்தந்த மாவட்டத்தில் மூடப்பட்டு கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளை காப்பாற்றி வேலை இழப்புகளையும் தவிர்க்க முடியும். கோபியை தனி மாவட்டமாக பிரித்தால் கோபியை சுற்றி இருக்கின்ற மக்கள் வளர்ச்சி பெறலாம் என்ற ஆர்வத்தோடு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். அந்த பகுதி மக்களுடைய கோரிக்கையை தான் நான் தமிழக அரசுக்கு தெரிவித்தேன். 


 

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை பிரித்து கொண்டிருக்கிறார்களே அங்கெல்லாம் 100 ஏக்கர் நிலம் பெற்றுக்கொண்டு தான் பிரித்தார்களா ?. இப்போது வேலூரை மூன்றாக பிரித்தார்களே அங்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 100 ஏக்கர் கொடுத்த மூன்று தர்ம பிரபுகள் யாரென்று அமைச்சர் சொல்ல முடியுமா ?. ஒரு மாவட்டம் பிரிப்பதற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கும் 100 ஏக்கர் நிலம் எதற்கு என்று எனக்கு புரியவில்லை. அதற்கான விளக்கத்தை அமைச்சரிடம் எதிர்பார்க்கிறேன். 
 

சேலம் - சென்னை  8 வழிச்சாலை திட்டத்திற்கு அந்த பகுதி மக்கள் நிலம் கொடுக்கவில்லை என்று சொன்னால் திட்டத்தை கைவிட்டுவிடலாமே. எரிவாயு குழாய் பதிக்கின்ற திட்டத்திற்கும், உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கின்ற திட்டத்திற்கும் நிலம் கொடுக்க மறுக்கும் விவசாயிகளை காவல்துறையை வைத்து மிரட்டுவது ஏன் ?. நிலங்களை கையில் வைத்துக்கொண்டு அல்லவா அந்த திட்டங்களை அறிவித்திருக்க வேண்டும். கொங்கு மண்டல அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் கொங்கு மண்டல மக்கள் சார்பாக கேட்கிறேன் மற்ற மாவட்ட பிரதிநிதிகளை போல நம் பகுதியில் இருக்கின்ற பெரிய மாவட்டங்களை பிரிக்க முயற்சி எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்