
ஈரோடு, கைகாட்டி வலசு, நசியனூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். 36 வயதான இவரது மனைவியின் பெயர் சூர்யா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமாருக்கு வலது கால் பாதத்திற்கு அருகில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவு கட்டு போட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் கால் எலும்பு கூடவில்லை. இதன் காரணமாக அடிக்கடி கால் வலிப்பதாக செந்தில்குமார் கூறி வேதனைப்பட்டுள்ளார். கடந்த வாரம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செந்தில்குமார் சென்று பார்த்தபோது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக செந்தில்குமாருக்கு கால் வலி அதிகமாக இருந்து வந்துள்ளது. இதனால் தற்கொலை செய்ய செந்தில்குமார் முடிவெடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து சம்பவத்தன்று இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டுக் கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது இரு மகள்கள் அக்கம் பக்கத்தினரிடம் கூறி உள்ளனர். பின்னர் உறவினர்கள் வந்து செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செந்தில்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.