Skip to main content

'நேற்று... இன்று... நாளை...' - குழப்பத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

 'Yesterday...today...tomorrow...'- Krishnagiri district AIADMK in confusion

 

முன்னாள் முதலமைச்சர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் அதிமுகவில் இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். இரண்டு அணிகளிலும் தினந்தோறும் ஆதரவாளர்களை இழுக்கும் படலமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உச்சக்கட்டமாகக் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நட்சத்திர ஓட்டலில், அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தலைமையில் முதல் கட்டமாக நூற்றுக்கணக்கானவர்கள் ஓபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து இணைந்தனர்.

 

இதில் முன்னாள் சேர்மன் வெங்கடாசலம், தேவராஜ், தங்கராஜ், வெற்றிவேல், டாக்டர் ஜான் திமோத்தி, ராஜேந்திர கவடு உள்ளிட்டோர் அடங்குவர். இரண்டாம் கட்டமாக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ், கே.இ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேப்பனஹள்ளி வேட்பாளராக நிறுத்தப்பட்ட மது (எ) ஹேம்நாத், முன்னாள் சேர்மன் கோவிந்தராஜ் ஆகியோர் இணைந்தனர். மது (எ) ஹேம்நாத்தின் மனைவி லாவண்யா ஹேம்நாத் தற்பொழுது சூளகிரி ஒன்றிய சேர்மேனாக இருந்து வருகிறார்.

 

இதுபோன்ற சூழலில் ஓபிஎஸ் அணியில் இணைந்த மது (எ) ஹேம்நாத் அண்மையில் திடீரென முன்னாள் அமைச்சர் மு.தம்பிதுரையை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கிறார். மேலும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த பொழுது காவேரிப்பட்டணத்தில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது புகார் அளித்து அவர்களைத் தாக்க முயன்ற சம்பவமும் நடந்தது.

 

 'Yesterday...today...tomorrow...'- Krishnagiri district AIADMK in confusion

 

இதுபோன்ற குழப்பங்களை ஆறுமுகம் உள்ளிட்டோர் ஏற்படுத்தி வருகின்றனர் என்ற பேச்சு அம்மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. ஆறுமுகம் தற்பொழுது ஒன்றிய செயலாளர் பதவிக்கு கோவிந்தராஜால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதேபோன்று பலரும் பரிந்துரைக்கப்படுவதாக அதிமுகவினர் முகம் சுளிக்கின்றனர். இவரும் தம்பிதுரையை சந்தித்துள்ளார். அதேபோல் கே.பி.முனுசாமி ஆதரவாளர்களும் ஓபிஎஸ் அணியில் பதவிக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக உள்ள கோவிந்தராஜ் தலைமையில் கட்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டும் தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது. எப்படி இவர்கள் தம்பிதுரையை சந்திக்கலாம் என்று ஓபிஎஸ் அணியில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற நிலை நடைமுறையில் உள்ள பொழுது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஏன் ஆறு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதிமுகவை பொறுத்தவரையில் மேற்கு கிழக்கு என இரண்டு மாவட்டமாகத்தான் செயல்படுகிறது.

 

இதுபோன்ற சூழலில், ஈபிஎஸ்ஸால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தற்பொழுது ஓபிஎஸ் அணிக்குச் செல்வதால் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பணிகளை தம்பிதுரை நடத்தி வருகிறார். இதுபோன்ற நடவடிக்கைகளால் ஓபிஎஸ் அணியில் சேர்ந்தவர்கள் உண்மையிலேயே அவருக்கு ஆதரவாக சேர்ந்தார்களா என்ற சந்தேகம் எழுகிறது. இதன் காரணமாக அதிமுக தொண்டர்கள் இடையே உச்சக்கட்ட குழப்பம் நீடித்து வருகிறது. ஓபிஎஸ் அணியிலேயே இரண்டு பிளவுகள் ஏற்பட்டு மோதல் வெடித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.