Skip to main content

“நம்மையும் காத்து நாட்டு மக்களையும் காப்போம்..” - மு.க. ஸ்டாலின்! 

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

"We will protect ourselves and the people of the country." Stalin


இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் பெரும் அளவில் உள்ளது. இதனைக் கட்டுபடுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கரோனாவில் தற்காத்துக் கொள்ள தனி மனித இடைவெளி, முகக்கவசம் மற்றும் கைகளை சுத்தம்செய்ய வேண்டும் என மருத்துவர்களும் அத்துறை வல்லுநர்களும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துவருகின்றனர். 

 

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை, மக்கள் அனைவரும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துக் கொள்கிறேன்.

 

கரோனா இரண்டாவது அலை என்பது, முதல் அலையைவிட மிக மோசமானதாக இருக்கிறது. பரவல் என்பது, முதல் அலையை விடக் கூடுதலாக உள்ளது. அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்தத் துயர்மிகு நிலையை மக்கள் அனைவரும் முதலில் உணர வேண்டும்.

 

அதிலும் குறிப்பாக, வட மாநிலங்களில் இருந்து வரும் தகவல்கள் அச்சம் தருவதாக உள்ளன. அங்கு நூற்றுக்கணக்கான மரணங்கள் தினந்தோறும் நிகழ்கின்றன. இந்த நிலை தமிழகத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், மக்கள் எச்சரிக்கையாக இருப்பது மட்டுமல்ல, அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறேன்.

 

இதனை மனதில் கொண்டு தமிழக அரசின் சார்பில் நேற்று புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

 

இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகள் வரும் 6-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அரசு அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களும் ஐம்பது விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படும். பேருந்துப் போக்குவரத்தும் ஐம்பது விழுக்காடு பயணிகளுடன் இயங்கும். பயணிகள், இச்சூழலில், பேருந்துப் போக்குவரத்தைக் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். கூட்டமாக நிற்பது, நெருங்கி நிற்பது ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

 

மளிகை, காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் இயங்கலாம். மருந்து, பால் போன்ற அத்தியாவசியப் பொருள் வழங்கல் இதனுள் வராது. உணவகங்களில் வாங்கிச் செல்லுதல் சேவை மட்டும் இருக்கிறது. இது தொடர்பாகத் தமிழக அரசின் சார்பில் விரிவான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை மீறாமல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் மக்கள் நன்மைக்காகப் போடப்படுபவை தான் என்பதை மக்களே உணர்ந்து கொண்டுள்ளார்கள். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் சங்கிலியைத் துண்டிக்காமல் கரோனாவை ஒழிக்க முடியாது. அத்தகைய சங்கிலியைத் துண்டிக்கவே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமல் இருப்பது என்பது, வேகமான கரோனா பரவலுக்குக் காரணமாக அமைந்துவிடும். அதனால் அரசின் கட்டுப்பாடுகளை, அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளாக இல்லாமல் மக்கள் தங்களுக்குத் தாங்களே போட்டுக் கொள்ளும் கட்டுப்பாடுகளாக நினைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்பட்டால் மட்டுமே, நம் பாதுகாப்பை உறுதி செய்திட இயலும்.

 

நோய்ப் பரவாமல் தடுத்தல் - நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களைக் காப்பாற்றுதல் ஆகிய இரண்டு குறிக்கோள்களைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களைக் காப்பாற்றுதல் என்பது அரசின் பணி என்றால், நோய் பரவாமல் தடுத்தல் என்பது அரசுடன் மக்களும் சேர்ந்து ஆற்ற வேண்டிய பணியாகும்.

 

அவசர, அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்கவும். அப்படியே வெளியில் வந்தாலும் முகக்கவசம் அணியவும்; மூக்கையும் வாயையும் மூடியிருப்பது போல முகக்கவசம் அணிவது அவசியம். பேசுகிறபோதும் பணியிலிருக்கும் போதும் முகக்கவசம் கட்டாயம். குளிர்சாதன அறைக்குள் இருப்பவர்கள் ஜன்னல்களைத் திறந்து வைத்திருப்பது அவசியம்.  கிருமி நாசினி திரவங்களை அடிக்கடி பயன்படுத்தவும். கபசுரக் குடிநீரை அருந்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் ஏற்படுத்தக் காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம்!” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது