Skip to main content

''தொண்டர்களும், பொதுமக்களும் என் பக்கம்... நிச்சயம் இதை சரி செய்வேன்''-சசிகலா பேட்டி!

Published on 26/06/2022 | Edited on 26/06/2022

 

Sasikala

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் எழுந்து, அதனைத் தொடர்ந்து பொதுக்குழுக் கூட்டமும் நடைபெற்று முடிந்த நிலையில், ஓபிஎஸ்-இபிஎஸ் பிளவு காரணமாக அது தொடர்பான சிக்கல்கள் தற்பொழுது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.

 

அதிமுகவில் ஒருபக்கம் பூசல்கள் நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், 'புரட்சி பயணம்' என்ற பெயரில் சென்னை தியாகராய நகரிலிருந்து சசிகலா பயணம் ஒன்றை தொடங்கியுள்ளார். அதன்படி திருத்தணி சென்ற அவர் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நீங்கள் வந்தால்தான் பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இருக்கும் என்றுதான் என்னுடைய சுற்றுப்பயணங்களில் தொண்டர்கள் அதிகம் வலியுறுத்துகிறார்கள். நிச்சயமாக அதிமுக ஆட்சியை அமைப்பேன். அது மக்களின் ஆட்சியாக இருக்கும். எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு இதே மாதிரி ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அதை என்னுடைய சின்ன வயதிலேயே பார்த்து வந்தேன். எனவே என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு இரண்டாவது முறை இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையும் சரி செய்ய முடியும்.

 

என்னைப்பொறுத்தவரை கழகத் தொண்டர்களும், வாக்களிக்கும் பொதுமக்களும்தான் என்னுடன் இருக்கிறார்கள். அதனால் நிச்சயமாக இதை சரிசெய்து மீண்டும் அதிமுக ஆட்சியைக் கொண்டு வந்துவிடுவேன். அது ஏழைகளின் ஆட்சியாக, மக்களின் ஆட்சியாக இருக்கும். அதிமுகவை காக்கும் பொறுப்பு எனக்கும் உள்ளது. மனநிலை மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் அதேசமயம் இதையும் சரி பண்ண முடியும் என்ற தைரியம் என்னிடம் இருக்கிறது. அதை நிச்சயம் செய்வேன். கழகத் தொண்டர்களின் துணையோடு நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். இது எங்களுக்குள் உள்ள பிரச்சனை இதனை சரிசெய்து கொள்வது எங்களுடைய எண்ணம். ஜெயலலிதா இருந்திருந்தால் இது போன்ற நிலை அதிமுகவிற்கு வந்திருக்காது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.