Skip to main content

தொகுதியை அறிவோம்... விருதுநகர்...

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

இப்போதுதான் விருதுநகர். இதற்குமுன் சிவகாசி. ஆம். சிவகாசி மக்களவைத் தொகுதிதான், தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் விருதுநகர் மக்களவைத் தொகுதியானது. விருதுநகர் தொகுதி குறித்த அலசல் என்று வரும்போது, பழைய சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தபோது எம்.பி.க்களாக பாராளுமன்றம் சென்றவர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.  

 

virudhunagar

 

சிவகாசி, சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் (தனி) ஆகியவை சிவகாசி மக்களவைத் தொகுதியில் இருந்த சட்டமன்ற தொகுதிகள். விருதுநகர் மக்களவைத் தொகுதியாக மாறியபின், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கோவில்பட்டி தொகுதிகள் வேறு தொகுதிகளுக்குப் போய்விட்டன. தற்போதைய விருதுநகர் மக்களவைத் தொகுதியில், விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. 
 

இத்தனை எம்.பி.க்களும் என்ன செய்தார்கள்?
 

சரி, சிவகாசி மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதியிலிருந்து  இதுவரை டெல்லி சென்ற எம்.பி.க்களையும் அவர்கள் தொகுதிக்கு ஆற்றிய சேவைகளையும் பார்ப்போம்!
 

jayalakshmi

 

1967-71 காலகட்டத்தில் தனிப்பெரும் கட்சியாக விளங்கியது சுதந்திரா கட்சி. அப்போது நாடாளுமன்றத்துக்கு அக்கட்சி சார்பில் சென்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 44. சிவகாசி மக்களைவைத் தொகுதியும் 1967-ல் சுதந்திராக கட்சி எம்.பி.யாக ராமமூர்த்தியை அனுப்பியது. ஜெயலட்சுமி, 1971 மற்றும் 1977 மக்களவைத் தேர்தல்களில் வெற்றிபெற்று, இரண்டு தடவை காங்கிரஸ் எம்.பி. ஆனார். அன்றைய பிரதமர் இந்திராகாந்திக்கு நெருக்கமானவராக இருந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சியில் காங்கிரஸ் சார்பில் எம்.எல்.சி.யாகவும் இருந்தார். 1980 மற்றும் 1984-ல் அதிமுக எம்.பி.யாக, சௌந்தரராஜனை பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள் சிவகாசி தொகுதி மக்கள்.  1989-ல் காளிமுத்துவும், 1991-ல் கோவிந்தராஜுலுவும் அதிமுக எம்.பி.க்களாக டெல்லி சென்றனர். 1996-ல் சிபிஐ எம்.பி. ஆனார் அழகிரிசாமி. 1998 மற்றும் 1999-ல் வைகோவும், 2004-ல் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனும் மதிமுக எம்.பி.க்கள் ஆனார்கள். 2009-ல் மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் எம்.பி. ஆனார். 2014-ல் அதிமுக எம்.பி. ஆகி பாராளுமன்றம் போனார் ராதாகிருஷ்ணன். 

 

காலம்காலமாக, பெருவணிகர்களால் வியாபாரத்தில் சிறந்து விளங்கும் விருதுநகரும், குட்டி ஜப்பான் என்று போற்றப்படும் சிவகாசியும் இத்தொகுதியில் அடங்கிய ஊர்களே. ஆனாலும், அப்போதெல்லாம் எம்.பி.க்கள் யாரும் தொகுதியின் முன்னேற்றத்தில் போதிய கவனம் செலுத்தியதில்லை. சிட்டிங் அதிமுக எம்.பி. ராதாகிருஷ்ணனும் அந்த வகைதான். இத்தகையவர்களை பொம்மை எம்.பி.க்கள் என்றே வரலாறு பதிவு செய்திருக்கிறது. 

 

வைகோவும் மாணிக்கம் தாகூரும் ஓகே!
 

அதே நேரத்தில், தொகுதியில் எம்.பி.க்கென்று அலுவலகம் அமைத்து, சிறப்பாகச் செயல்பட்டவர்கள் என்றால், வைகோவும் மாணிக்கம் தாகூரும்தான். 

 

vaiko

 

விருதுநகர் – செங்கோட்டை அகல ரயில்பாதை, விருதுநகர் மேம்பாலம், மஞ்சள் காமாலை தடுப்பூசி முகாம், கண் சிகிச்சை முகாம், மாற்றுத் திறனாளிகளுக்கான அறுவைச் சிகிச்சை முகாம் என்பதெல்லாம் வைகோ நிகழ்த்திய சாதனைகளே! மாணிக்கம் தாகூரும்  ‘ஆக்டிவ்’ எம்.பி.யாக தொகுதி மக்களின் நலனில் அக்கறை செலுத்தியவரே. விருதுநகர் – மானாமதுரை அகல ரயில்பாதை வந்ததற்கு இவருடைய பங்களிப்பு அதிகம்.  

 

manikam

 

தொழில் நிமித்தம் ரயிலில் செல்பவர்களுக்கு  சலுகைக் கட்டண அட்டைகளைத்  தாராளமாகக் கிடைக்கச் செய்தார். பட்டாசு ஆலை விபத்துக்களை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்தபோது, இறந்தவர்களுக்கும் காயம் பட்டவர்களுக்கும் மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்கச் செய்தார். இவருடைய முயற்சியால்தான், விருதுநகருக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் வந்தன. மாணவர்களுக்காக கல்விக்கடன் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். 
 

தீர்க்கப்படாத பிரச்சனைகள்!


விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பேனா-நிப் தொழில்,  தீப்பெட்டி தொழில், அச்சுத்தொழிலெல்லாம் நலிவடைந்து போய்விட்டன. தொழிலாளர்களைப் போலவே, பட்டாசுத் தொழிலும் நித்தமும் செத்துப் பிழைக்கிறது. அதனால், வேலை இழந்த இத்தொகுதி மக்கள்,  வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த நெருக்கடியான சூழ்நிலையில், மத்திய அரசு உதவியுடன் ஆலங்குளம் சிமெண்ட் ஆலை,  ரூ.550 கோடி செலவில் நவீனப்படுத்தப்படும் என்ற தொழில்துறையின் அறிவிப்பெல்லாம் பல ஆண்டுகளாகக் கிடப்பிலேயே கிடக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் யாரும், இதுபோன்ற தொகுதியின் பிரதான பிரச்சனைகளில் கவனம் செலுத்தியது இல்லை. 
 

பழைய ஃபார்முலா கிலி!
 

தற்போது, விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ், தேமுதிக, அமமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஐந்து முறை வென்ற இத்தொகுதியை, தேமுதிக தந்த அழுத்தத்தால், விட்டுக்கொடுத்திருக்கிறது அதிமுக. திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அழகர்சாமி என்ற புதுமுகத்தை வேட்பாளராகக் களமிறக்கியிருக்கிறது தேமுதிக.

 

alagarsamy

 

கேப்டன் ரசிகர் மன்ற கிளைப் பொறுப்பிலிருந்து, படிப்படியாக வளர்ந்து விசாரணைக்குழு உறுப்பினர் வரை ஆகியிருக்கிறார் அழகர்சாமி. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார் மாணிக்கம் தாகூர். 


இத்தொகுதியில், ஆண் வாக்காளர்கள் 7,14,606, பெண் வாக்காளர்கள் 7,44,588, மற்றவர்கள் 122 என மொத்தம் 14,59,316 பேர் வாக்காளர்களாக உள்ளனர். 
 

கட்சிகளின் வாக்கு வங்கி, சாதி பலம், பணபலம் போன்றவை, வேட்பாளரின் வெற்றிக்கான பொதுவான கணக்காகப் பார்க்கப்பட்டாலும், உச்சக்கட்ட பட்டுவாடாவில் முந்துபவருக்கே வெற்றிக்கனி என்ற இத்தொகுதியின் பழைய ஃபார்முலா,  தேர்தல் நாள் வரையிலும் எல்லா வேட்பாளர்களுக்கும் கிலி ஏற்படுத்துவதாக இருக்கிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயபிரபாகரனுக்கு உற்சாக வரவேற்பு; வெற்றியைத் தேடித்தருமா கேப்டனின் அனுதாப அலை?

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Analysis of Vijaya Prabhakaran's chances of winning

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சி அதிமுக, பாஜக கட்சிகளுடன் இறுதிக்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இறுதியாக தேமுதிக கட்சி அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நிறைவு செய்தது. நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திருவள்ளூர் தனித் தொகுதி, மத்திய சென்னை, விருதுநகர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய 5 சீட்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டன. இதையடுத்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். 

அதில், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சி சார்பில் தேமுதிக வேட்பாளராக மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, வேட்புமனு தாக்கலை நிறைவு செய்த விஜய பிரபாகரன் தான் போட்டியிடும் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விஜய பிரபாகரனின் பூர்விகம் விருதுநகர். தந்தையும் மறைந்த தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த்தின் சொந்த ஊர் விருதுநகர் என்பதால் அங்கு அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார் மண்ணின் மைந்தன்.  விஜயகாந்த் பிறந்த ஊர் விருதுநகர் என்பதால் அங்கு தேமுதிகாவிற்கு எப்போதுமே பேராதரவு இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதுவும் கட்சியின் தலைவரின் அனுதாப அலையாலும், விஜயகாந்தின் மகன் என்பதாலும் விஜய பிரபாகரன் எளிதில் வெற்றி பெறுவார் எனக் கூறப்படுகிறது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை, பாஜக சார்பில்  நடிகை ராதிகா சரத்குமார், தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிடுவதால், அது ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது. தற்போது, சிட்டிங் எம்பியான காங்கிரசின் மாணிக்கம் தாகூரே மீண்டும்  விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் களம் காண்கிறார். விருதுநகர் தொகுதி குறித்து தேமுதிகவினர் பேசுகையில், விஜய பிரபாகரன் மண்ணின் மைந்தர். விருதுநகர்தான் அவரின் பூர்விகம். விருதுநகர் மக்களும் விஜய பிரபாகரனை தங்கள் வீட்டு பிள்ளையாக பார்க்கிறார்கள். அதனால் விருதுநகரில் விஜயபிரபாகரன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. விஜய பிரபாகரன் நீண்ட ஆண்டுகளாக மக்கள் சேவை, அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருபவர். மறைந்த தலைவர் விஜயகாந்த்தின் மகனான விஜய பிரபாகரன், தந்தை எதிர்கொண்ட சவால்களையும் பார்த்து வளர்ந்தவர். சொந்த தொகுதியான விருதுநகர் தொகுதியைச் சிறப்பாக கொண்டு வரவேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே நோக்கம். இப்போதே விருதுநகரில் தங்கி மக்கள் பணிகளை மேற்கொள்ள விஜய பிரபாகரன் வாடகைக்கு வீடு ஒன்றை பார்த்து வைத்துள்ளார்.

அதிமுக தற்போது கூட்டணி அமைத்து இருப்பதால் இந்த முறை தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகசாமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த முறை அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதிமுக முழு ஒத்துழைப்பு வழங்கினால் வெற்றி நிச்சயம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தேமுதிக களம் இறங்கியுள்ளது. விருதுநகர் வேட்பாளர் விஜய பிரபாகரன் செல்லும் இடங்களில் எல்லாம் தந்தை வழியில் செயல்படுவேன் என உருக்கமாக பேசி வருகிறார். மேலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தொடர்ந்து இந்த முறை தேமுதிக விருதுநகரை கைப்பற்ற தேவையான களப்பணிகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

விருதுநகர் மண்ணின் மைந்தன் விஜய பிரபாகரன் போட்டியிடும் முதல் மக்களவைத் தொகுதியில் வெற்றி வாகை சூடுவாரா? என்பதை ஜூன் 4 ஆம் தேதி தான் தெரியும்.  

Next Story

1,200 ஆண்டுகள் பழமையான திருமால், வைஷ்ணவி சிற்பங்கள் கண்டெடுப்பு!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
1,200-year-old Tirumal, Vaishnavite sculptures discovered in virudunagar

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகில் அம்மாபட்டி ஊராட்சி, களத்தூரில் 1,200 ஆண்டுகள் பழமையான முற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் உள்ள திருமால், வைஷ்ணவி, லிங்கம், நந்தி, காளி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. களத்தூர் அர்ச்சுனா ஆற்றின் கரையில், பழமையான திருமால் சிற்பம் இருப்பதாக அம்மாபட்டி வீரையா கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது, “திருமால், மாயோன் என தொல்காப்பியத்திலும், நெடுமால், நெடியோன், நெடுமுடி என பிற இலக்கியங்களிலும் குறிப்பிடப்படுகிறார். இங்கு பீடத்தின் மீது அமர்ந்த நிலையில், நான்கு கைகளுடன், கர்த்தரி முக முத்திரையில், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்து, கிரீட மகுடத்துடனும், காதுகளில் மகர குண்டலங்களுடனும் திருமால் காட்சியளிக்கிறார். முகம் தேய்ந்துள்ளது. சக்கரம் பக்கவாட்டில் திரும்பி பிரயோகச் சக்கரமாக உள்ளது. இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது மார்பில் ஸ்ரீவத்ஸமும், கிரீடமகுடத்தின் பின்பக்கம் சிரச்சக்கரமும் உள்ளன. கைகளின் மேற்பகுதியின் நடுவில் தோள்வளை அணிந்துள்ளார். சிற்பம் 109 செ.மீ உயரமுள்ளது.

இதன் அருகில் 82 செ.மீ உயரமும், 46 செ.மீ அகலமும் உள்ள பலகைக் கல்லில் திருமாலின் பெண் சக்தியான வைஷ்ணவியின் புடைப்புச் சிற்பம் உள்ளது. சப்தகன்னியரில் ஒருவரான இவர், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்திருக்கிறார். சிற்பம் சேதமடைந்துள்ளது. இதன் வடக்கில் நந்தியும், ஆவுடை இல்லாத லிங்கமும் உள்ளன. இங்கிருந்து 300மீ தூரத்தில் 2½ அடி உயரமுள்ள எட்டுக்கை காளி சிற்பம் உள்ளது. திருமால் கையிலுள்ள பிரயோகச் சக்கர அமைப்பு மூலம், இச்சிற்பங்கள் கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். அக்காலகட்டத்தில் இவ்வூரில் அருகருகே சிவன், திருமால், காளி கோயில்கள் இருந்துள்ளதை அறிய முடிகிறது. கி.பி.9-ம் நூற்றாண்டு வரை வைணவக் கோயில்களில் சப்தமாதர் வழிபாடு இருந்துள்ளது. 

1,200-year-old Tirumal, Vaishnavi sculptures discovered in virudunagar

அருகிலுள்ள மேட்டில் பெரிய கருங்கற்கள் உள்ளன. இவை இரும்புக்காலத்தைச் சேர்ந்த கல்வட்டம், கல்திட்டையின் கற்களாக இருக்கலாம். இதில் இருந்த கற்களை எடுத்து லிங்கத்தைச் சுற்றி வைத்துள்ளனர். மேலும் நுண்கற்காலக் கருவி, செங்கற்கள், சிவப்பு பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக்கசடுகள், சுடுமண் ஓடுகள் போன்றவையும் அங்கு சிதறிக் கிடக்கின்றன. ஒரு செங்கலின் அளவு, நீளம் 33 செ.மீ, அகலம் 16.5 செ.மீ, உயரம் 7 செ.மீ. ஆகும். இதன் மூலம் இவ்வூரில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புக் காலத்தில் இரும்பு உருக்கு உலையும், மக்கள் குடியிருப்பும் இருந்துள்ளது எனலாம்.  

1,200-year-old Tirumal, Vaishnavi sculptures discovered in virudunagar

இவ்வூருக்கு அருகிலுள்ள நத்தம்பட்டி, மங்கலத்துக்கும் வைணவம், சைவம் சார்ந்த தொடர்புகள் உள்ளன. மங்கலம் சிவன் கோயில் கல்வெட்டில் களத்தூர் குளத்தின் ராஜேந்திர சோழன் மடை குறிப்பிடப்படுகிறது. நத்தம்பட்டியில் 8-ம் நூற்றாண்டு திருமால் சிற்பம் ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அருகருகே உள்ள இம்மூன்று ஊர்களிலும் இரும்புக் காலத்திலும், வரலாற்றின் இடைக்காலத்திலும் மக்கள் வாழ்ந்துள்ளனர். இவ்வூர்கள் சேரநாட்டிலிருந்து மதுரை செல்லும் வணிகப் பெருவழியில் உள்ளன. எனவே வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடங்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என அவர்கள் தெரிவித்தனர்.