Skip to main content

அதிமுக அரசின் தோல்வி பயம், திமுகவின் அலட்சிய போக்கு... தேமுதிக கண்டனம்

Published on 04/07/2018 | Edited on 04/07/2018
Vijayakanth


தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் 04.07.2018 புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தமிழகத்தில் 2016-ல் உள்ளாட்சி தேர்தல் நடத்தாதன் விளைவு இன்றைக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய பல நிதிகள் தமிழகத்திற்கு வரவில்லை. அதிமுக அரசின் தோல்வி பயத்தாலும், எதிர்கட்சியான திமுகவின் அலட்சிய போக்காலும், உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் நடைபெறாமல் இருக்கின்ற அவலத்தை செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், தமிழகத்தின் நிதி பங்கீட்டை மத்திய அரசிடம் இருந்து முழுமையாக பெற்றிடும் வகையில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்திட தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
 

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை, தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்திவருகிறது. இதற்கு தேமுதிக கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகள் முன்பு, முற்றுகை போராட்டம் நடத்தி தேமுதிகவினர் கைதும் ஆனார்கள். தேமுதிக போராட்டத்தின் எதிரொலியாக தமிழக அரசு உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தனியார் சர்க்கரை ஆலைகள் இதுநாள் வரையில் வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்காமல் இருப்பதை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
 

ஒரு நாட்டினுடைய வளர்ச்சிக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் தற்போதைய அதிமுக ஆட்சியில் பல்கலைக்கழகங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஊழல் ஒன்றையே பிரதானமாகக் கொண்டு ஆட்சி செய்கின்ற அதிமுக ஆட்சியில், பல்கலைக் கழகங்களில் ஊழல், கல்லூரியில் பயிலும் SC/ST மாணவர்களுக்கு ஒதுக்கவேண்டிய நிதியில் ஊழல், போலியான பெயரளவில் கல்லூரி நடப்பதாக மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்கியதாக ஊழல், ஆசிரியர் நியமனத்தில் ஊழல், பல்கலைக் கழக கட்டமைப்பில் ஊழல், NRI ஊழல் என்று பல்கலைக்கழக ஊழல்கள் பரந்து, விரிந்து கிடக்கின்றது. பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற முறையில் மேதகு ஆளுநர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, மத்திய புலனாய்வு (CBI) துறையின் மூலமாக விசாரித்து, தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
 

தமிழகத்திலே எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பெண்களிடம் செயின் பறிப்பு, பாலியல் பலாத்காரம், ஆள் கடத்தல், ரவுடிகள் அட்டகாசம் என்று சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுகொண்டேபோகிறது. தமிழகத்திலுள்ள மத்திய அமைச்சர் அவர்களே “தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது” என்று குற்றம்சாட்டுகின்ற அளவிற்கு தமிழகம் சீர்கெட்டுக்கிடக்கின்றது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவதற்காக எடப்பாடி தலைமையிலான அரசு, கமிஷன் ஒன்றே குறிக்கோளாக கொண்டு மணல் கொள்ளை, டாஸ்மாக் ஊழல், நெடுஞ்சாலை துறையில் ஊழல், பொதுப்பணித்துறையில் ஊழல் என்று தமிழகத்திலுள்ள அனைத்து துறைகளிலும் தங்களுடைய ஆட்சியிலே ஊழல் மலிந்துகிடக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதைப்போல, எத்தனை சதவிகிதம் கமிஷன் வாங்குவது எப்படி என்பதைப் பற்றி தமிழக முதல்வரும், எதிர்கட்சி தலைவரும் பொது நிகழ்ச்சிகளில் விவாதித்துக்கொள்வதை ஊடகங்கள் மூலமாகவும், பத்திரிக்கைகள் மூலமாகவும், பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே தமிழகத்திலே நடக்கின்ற வெளிப்படையான ஊழல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

 

 

 

சார்ந்த செய்திகள்