Skip to main content

“எங்களுக்கு குண்டு போடவும் தெரியும்” - கர்னல் பாண்டியன் வழக்கில் நடந்த ட்விஸ்ட்!  

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

The twist in the case of Colonel Pandian who spoke threateningly!

 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த இராணுவ வீரர் பிரபு மற்றும் கவுன்சிலரான சின்னசாமிக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்தத் தகராறு கைகலப்பாக மாறியது. இதில், இராணுவ வீரர் பிரபுவுக்கு கடுமையான காயம் ஏற்பட்டு பிறகு மரணமடைந்தார். 

 

இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். பிப்ரவரி 21 ஆம் தேதி நடந்த போராட்டத்தில் பாஜக மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் என்பவரும் கலந்து கொண்டார். 

 

போராட்டத்திற்கு முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த கர்னல் பாண்டியன், “எங்களுக்கும் குண்டு போடவும் துப்பாக்கியால் சுடவும் தெரியும்” என்றார். இதற்கு அங்கிருந்த செய்தியாளர்கள், “நீங்கள் பேசுவதே பெரும் மிரட்டல் தொனியில் இருக்கிறதே” என்று தெரிவித்தனர். அதற்கு அவர், “திமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு செய்திகளைப் போடுவதேயில்லையா”? என்று தெரிவித்தார். இதனால், செய்தியாளர்களுக்கும் கர்னல் பாண்டியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கரு.நாகராஜன் சமாதானம் செய்து வைத்தார்.

 

அதன்பிறகு போராட்ட மேடைக்கு சென்ற கர்னல் பாண்டியன் மீண்டும் பேசும்போது, “ஒரு விஷயத்தை தமிழக அரசுக்கு எச்சரிக்கிறேன். உலகத்திலேயே இரண்டாவது பெரிய ஆர்மி இந்தியன் ஆர்மி. அதுமட்டுமல்ல, உலகத்திலேயே ஒழுக்கமான ஆர்மி. அப்படிப்பட்ட இராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழகத்திற்கும் தமிழக அரசுக்கும் நல்லதல்ல. எங்களுக்கு பரீட்சை வைத்து பார்க்க நினைத்தால் நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது. 

 

இதை நான் அன்பாக சொல்கிறேன். இங்கே அமர்ந்திருக்கும் அனைத்து முன்னாள் இராணுவ வீரர்களும் குண்டு வைப்பதிலும் சுடுவதிலும் சண்டையிடுவதிலும் கெட்டிக்காரர்கள். இந்த வேலைகள் எல்லாம் எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இதை எல்லாம் நாங்கள் செய்வதாக இல்லை. எங்களை செய்ய வைத்து விடாதீர்கள் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்” எனக் கூறி இருந்தார்.

 

தொடர்ந்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கர்னல் பாண்டியன் பாஜகவின் போராட்டக் களத்தில் மிரட்டும் வகையில் பேசியதாக அவர் மீது 2 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறையின் உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவல்களை வைத்து திருவல்லிக்கேணி காவல்துறையினர் கர்னல் பாண்டியன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது மற்றும் வன்முறையைத் தூண்டுவது என்பதன் அடிப்படையில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி குற்றத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பிரிவுகள் சேர்க்கப்படும் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில், ராணுவ அதிகாரி பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை அற்ற மன்னிப்பு கோரியுள்ளார். பாண்டியன் மன்னிப்பு கோரியதை அடுத்து அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது, இனி இதுபோல் பேச மாட்டீர்களா என பாண்டியனிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இனி இவ்வாறு பேச மாட்டேன் என பாண்டியன் நிபந்தனை அற்ற மன்னிப்பு கோரியதை அடுத்து முன் ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.