Skip to main content

பரபரப்பான எம்.எல்.ஏ திட்டக்குடி கணேசன்; இப்போது அமைச்சர்..! 

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

Thittakudi MLA Ganesan now has been minister

 

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூரை அடுத்துள்ளது தொழுதூர். இந்த ஊரைச் சேர்ந்த சின்னபிள்ளை, வெள்ளையன் தம்பதிகளின் மூத்த மகன் கணேசன். தங்கள் உழைப்பால் தங்கள் மகன் கணேசனை எம்.ஏ, பிஎட். எம்.ஃபில் வரை படிக்க வைத்தனர் சின்னபிள்ளையும் வெள்ளையனும். கணேசனுக்கு அரசுப் பணியைவிட அரசியல் பணியில் ஆர்வம் ஏற்பட்டது. 

 

1989 - 1991 காலகட்டத்திலேயே மங்களுர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் (இரண்டு ஆண்டுகளில் திமுக ஆட்சி அப்போது கலைக்கப்பட்டது) அடுத்து 1996-ல் (ஒரு ஆண்டு வரை) சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. பதவியில் இருந்தார். 2001 -  2006 சட்டமன்றத் தேர்தலில் மங்களூர் தொகுதியில் திமுக கூட்டணியில் திருமாவளவன் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று, பின்னர் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அப்போது நடந்த இடைத்தேர்தலில் கணேசன் நின்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். அடுத்து 2016ல் தொகுதி மறுசீரமைப்பில் திட்டக்குடி தொகுதியாக மாறியபிறகு, அங்கு போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். தற்போது நடந்து முடிந்த 2021 தேர்தலில் மீண்டும் திட்டக்குடி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார் கணேசன். அவருக்கு தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை ஒதுக்கியுள்ளது திமுக தலைமை. 

 

கணேசன், பல தேர்தல்களில் வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி சந்தித்தவர். எந்த நிலையிலும் மனம் தளராமல், சலிப்பில்லாமல் கட்சியினரோடும் தொகுதி மக்களோடும் வலம் வருபவர். கடந்த ஆண்டு  கரோனா காலத்தில் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தொகுதி முழுவதும் மக்களுக்கு அரிசி, காய்கறி, பணம் என்று தன்னால் முடிந்ததைச் சளைக்காமல் ஊர் ஊராகச் சென்று வழங்கியவர்களில் இவரும் ஒருவர். அதனால் இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் திரும்பினார். 

 

எப்போதும் தொகுதியில் உள்ள மக்களின் கண்களில் தெரிந்து கொண்டே இருப்பார். காரில் போகும்போது அரசியல் விஐபிக்கள் பலர் கார் கண்ணாடியை ஏற்றிக்கொண்டு செல்வதுண்டு. ஆனால் இவர் காரில் போகும்போது கட்சிப் பிரமுகர்கள், கட்சி கடந்து அறிமுகமானவர்கள் என யாராவது நடந்து சென்றால் கூட காரை நிறுத்தி விசாரித்து விட்டுச் செல்லும் பழக்கமுடையவர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எந்தக் கட்சியாக இருந்தாலும் கட்சி விரோத மனப்பான்மை இல்லாமல் பழகக்கூடியவர். 

 

கட்சியினர் குடும்பத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கு கொள்பவர். இவர் கடும் உழைப்பாளி என்றும் அத்தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இவருக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளது தொகுதி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

 

இவர் அமைச்சரானதற்கு அத்தொகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர். மேலும் மிகவும் பின்தங்கிய திட்டக்குடி தொகுதியில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும், வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் எனவும் தொகுதி மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.