Skip to main content

பரபரப்பான எம்.எல்.ஏ திட்டக்குடி கணேசன்; இப்போது அமைச்சர்..! 

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

Thittakudi MLA Ganesan now has been minister

 

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூரை அடுத்துள்ளது தொழுதூர். இந்த ஊரைச் சேர்ந்த சின்னபிள்ளை, வெள்ளையன் தம்பதிகளின் மூத்த மகன் கணேசன். தங்கள் உழைப்பால் தங்கள் மகன் கணேசனை எம்.ஏ, பிஎட். எம்.ஃபில் வரை படிக்க வைத்தனர் சின்னபிள்ளையும் வெள்ளையனும். கணேசனுக்கு அரசுப் பணியைவிட அரசியல் பணியில் ஆர்வம் ஏற்பட்டது. 

 

1989 - 1991 காலகட்டத்திலேயே மங்களுர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் (இரண்டு ஆண்டுகளில் திமுக ஆட்சி அப்போது கலைக்கப்பட்டது) அடுத்து 1996-ல் (ஒரு ஆண்டு வரை) சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. பதவியில் இருந்தார். 2001 -  2006 சட்டமன்றத் தேர்தலில் மங்களூர் தொகுதியில் திமுக கூட்டணியில் திருமாவளவன் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று, பின்னர் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அப்போது நடந்த இடைத்தேர்தலில் கணேசன் நின்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். அடுத்து 2016ல் தொகுதி மறுசீரமைப்பில் திட்டக்குடி தொகுதியாக மாறியபிறகு, அங்கு போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். தற்போது நடந்து முடிந்த 2021 தேர்தலில் மீண்டும் திட்டக்குடி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார் கணேசன். அவருக்கு தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை ஒதுக்கியுள்ளது திமுக தலைமை. 

 

கணேசன், பல தேர்தல்களில் வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி சந்தித்தவர். எந்த நிலையிலும் மனம் தளராமல், சலிப்பில்லாமல் கட்சியினரோடும் தொகுதி மக்களோடும் வலம் வருபவர். கடந்த ஆண்டு  கரோனா காலத்தில் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தொகுதி முழுவதும் மக்களுக்கு அரிசி, காய்கறி, பணம் என்று தன்னால் முடிந்ததைச் சளைக்காமல் ஊர் ஊராகச் சென்று வழங்கியவர்களில் இவரும் ஒருவர். அதனால் இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் திரும்பினார். 

 

எப்போதும் தொகுதியில் உள்ள மக்களின் கண்களில் தெரிந்து கொண்டே இருப்பார். காரில் போகும்போது அரசியல் விஐபிக்கள் பலர் கார் கண்ணாடியை ஏற்றிக்கொண்டு செல்வதுண்டு. ஆனால் இவர் காரில் போகும்போது கட்சிப் பிரமுகர்கள், கட்சி கடந்து அறிமுகமானவர்கள் என யாராவது நடந்து சென்றால் கூட காரை நிறுத்தி விசாரித்து விட்டுச் செல்லும் பழக்கமுடையவர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எந்தக் கட்சியாக இருந்தாலும் கட்சி விரோத மனப்பான்மை இல்லாமல் பழகக்கூடியவர். 

 

கட்சியினர் குடும்பத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கு கொள்பவர். இவர் கடும் உழைப்பாளி என்றும் அத்தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இவருக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளது தொகுதி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

 

இவர் அமைச்சரானதற்கு அத்தொகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர். மேலும் மிகவும் பின்தங்கிய திட்டக்குடி தொகுதியில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும், வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் எனவும் தொகுதி மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.