Skip to main content

திருவண்ணாமலை தொகுதிக்காக மோதும் பாஜக.. - விட்டுத்தர தயங்கும் அதிமுக..!

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

Thiruvannamalai constituency bjp admk


சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளும், காலியாகவுள்ள கன்னியாகுமரி நாடாளமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. 20 சட்டமன்ற தொகுதிகளில் திருவல்லிக்கேணி, ஆம்பூர், கே.வி.குப்பம், போளுர், திருவண்ணாமலை, பழனி, கோவை போன்ற தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென பாஜக தரப்பில் பட்டியல் தரப்பட்டுள்ளது.

 

பாஜகவின் தமிழக தலைவர் முருகன், திருவண்ணாமலை தொகுதி வேண்டும் என முரண்டு பிடிக்கிறார். போளுர் தொகுதியை பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில துணைத் தலைவர் ஏழுமலை கேட்கிறார். கே.வி.குப்பம் தொகுதி வேண்டுமென முன்னாள் மேயரும் மாநில மகளிரணி செயலாளர்களுள் ஒருவரான கார்த்திகாயினி காய் நகர்த்துகிறார். வானதி சீனிவாசன் கோவையில் ஒரு தொகுதியைக் குறிவைத்துள்ளார்.

 

இதில் திருவண்ணாமலை தொகுதியில் ஆரம்பத்தில் போட்டியிட ஆர்வம் காட்டிய தொகுதி பொறுப்பாளர் தணிகைவேல், கள நிலவரத்தைப் பார்த்து வேண்டாம் என ஒதுங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. தங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடம் நான் போட்டியிடவில்லை எனச் சொல்லியுள்ளார். இந்நிலையில் மீண்டும் மாநிலத் தலைவர் வழியாக திருவண்ணாமலை தொகுதி வேண்டும், எனக்கு வாங்கி தாருங்கள் என கேட்பதாகவும், அவருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சப்போர்ட் செய்வதாகவும் கூறப்படுகிறது.

 

இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த சில பிரமுகர்கள் நம்மிடம், தமிழக தேர்தல் பொறுப்பாளராக சில தேசிய தலைவர்கள் இருந்தாலும், உண்மையில் தமிழக தேர்தல் களத்தில் பாஜகவுக்காக பணியாற்றுபவர் முன்னாள் மத்தியமைச்சரும், இப்போது பெரிய பதவியில் உள்ள ஆந்திரா பிரமுகர்தான். அவர்தான் யாருக்கு சீட் தரலாம் என்பதைக் கூட முடிவு செய்கிறார். நாங்கள் வாங்கியுள்ள 20 தொகுதிகளில் பாதி தொகுதிகள் எதுஎதுவென முடிவாகிவிட்டது. அதற்கான வேட்பாளர்களும் முடிவாகிவிட்டார்கள்.

 

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி கார்த்திகாயினிக்கு என்பதும் உறுதியாகிவிட்டது. திருவண்ணாமலை மாவட்டம் போளுர் தொகுதிக்கு சி.ஏழுமலை என்பது 90 சதவிதம் உறுதி. இதேபோல் வானதி சீனிவாசன் உட்பட சிலருக்கான தொகுதிகளும் முடிவாகிவிட்டது. இந்நிலையில் திருவண்ணாமலை தொகுதியைக் குறிவைத்த வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவர் தணிகைவேல், பின்பு வேண்டாம் என ஒதுங்கினார். திருவண்ணாமலை தொகுதியில் எ.வ.வேலுவுக்கு நெருக்கடி தருகிறேன் எனச் சொல்லியே பாஜகவில் இணைந்தவர். அவருக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என எங்கள் தலைமையும் வாக்குறுதி தந்தது. தொகுதியில் செலவு செய்து வலம் வந்தவர், பின்னர் திடீரென சைலண்டாகிவிட்டார்.

 

Thiruvannamalai constituency bjp admk

 

தொகுதிகளுக்கான மறைமுக பேச்சுவார்த்தையின்போது அதிமுக தலைமை, மாவட்ட தலைநகரம் அமைந்துள்ள தொகுதியை எங்களுக்கு ஒதுக்க தயக்கம் காட்டினர். ஆனாலும் அந்த தொகுதியில் வேலுவை எதிர்த்துப் போட்டியிட அதிமுக பிரமுகர்கள் தயக்கம் காட்டியதை தொடர்ந்து எங்களுக்கே தள்ளிவிட முடிவு செய்தது. தணிகைவேல் ஆர்வம் காட்டாததால் நாங்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. இப்போது மீண்டும் தொகுதி வேண்டுமென தலைவர் முருகனுக்கு நெருக்கடி தந்துவருகிறார் தணிகைவேல். ஆளும்கட்சியான அதிமுக பிரமுகர்களே வேலுவை எதிர்த்து வெற்றிபெற முடியாது என பின்வாங்கும் சூழ்நிலையில் இவர் இப்போது மீண்டும் சீட் கேட்பது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார்கள்.

 

திருவண்ணாமலை தொகுதி பாஜக கேட்கும் பட்டியலில் உள்ளது. அந்த தொகுதிக்கான வேட்பாளரை தேர்வு செய்து தயாராக வைத்திருப்பதால், அதனை விட்டுத்தர அதிமுக தலைமை தயக்கம் காட்டுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற துவங்கியுள்ளன. இந்நிலையில், பாஜக போட்டியிட விரும்பும்  தொகுதிகள்  மற்றும் வேட்பாளர்கள் குறித்த உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் தணிகைவேல் -  திருவண்ணாமலை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.